இலங்கையிலிருந்து பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்தவரின் கடையை நொறுக்கிய கூட்டம்: அடுத்து நடந்த ஆச்சரியம்
இங்கிலாந்தில் மூன்று குழந்தைகள் கொல்லப்பட்ட இடத்துக்கு அருகே கடைவைத்திருந்த இலங்கையர் ஒருவரின் கடை, புலம்பெயர்தல் எதிர்ப்பாளர்களால் அடித்து நொறுக்கப்பட்டது.
ஆனால், அடுத்து ஒரு ஆச்சரியத்துக்குரிய நிகழ்வையும் சந்தித்தார் அவர்.
புலம்பெயர்ந்தவரின் கடையை நொறுக்கிய கூட்டம்
இங்கிலாந்திலுள்ள Southportஇல், மூன்று குழந்தைகள் கொல்லப்பட்ட இடத்துக்கு அருகே மளிகை கடை ஒன்றை நடத்திவருகிறார் பாலசூரியா (Chanaka Balasuriya, 47).
பாலசூரியா, 1990களில் இலங்கையிலிருந்து பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்தவர்.
ஜூலை மாதம் 30ஆம் திகதி, கொல்லப்பட்ட குழந்தைகளுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி ஒன்று நடைபெற, சிறிது நேரத்துக்குள் நூற்றுக்கணக்கானோர் Southport தெருக்களில் கூடி ஆர்ப்பாட்டங்களில் இறங்கியுள்ளார்கள்.
தன் கடைக்கு அருகிலுள்ள மசூதி ஒன்றின்முன் போராட்டக்காரர்கள் கூடியுள்ளதை அறிந்த பாலசூரியா, தன் மொபைல் மூலம், தன் கடையின் CCTV கமெராவைக் கண்காணித்துள்ளார்.
அப்போது, அவரது கடையை உடைத்து நொறுக்கிய ஒரு கூட்டம், கடைக்குள் நுழைந்து பொருட்களை சூறையாடியுள்ளது. கடைக்கு முன்னிருந்த குப்பைத்தொட்டிக்கு சிலர் தீவைத்துள்ளார்கள்.
படாதபாடு பட்டு, வெறுமையிலிருந்து துவங்கி முன்னேறி இந்த அளவுக்கு வந்திருக்கும் நிலையில், தன் கண் முன்னே தன் கடை சூறையாடப்படுவதைக் கண்ட பாலசூரியா, இனி நம் கதி அவ்வளவுதான் என்று எண்ணிக் கலங்கியுள்ளார்.
அடுத்து நடந்த ஆச்சரியம்
ஆனால், அடுத்த நாள் காலை ஒரு ஆச்சரியம் நிகழ்ந்தது என்கிறார் பாலசூரியா. ஆம், அக்கம்பக்கத்தில் வாழ்ந்த ஒரு கூட்டம் மக்கள், கடை முன் கிடந்த கண்ணாடித்துகள்களை சுத்தம் செய்யவும், கடையை ரிப்பேர் செய்யவும் துவங்கியதைக் கண்டு திகைத்து நின்றிருக்கிறார் பாலசூரியா.
அவர்களிடம் தான் இதற்கு முன் பேசியது கூட இல்லை என்கிறார் அவர்.
பாலசூரியாவின் கடையின் பக்கத்தில் சலூன் வைத்திருந்த ஒருவர், பாலசூரியாவின் கடையை ரிப்பேர் செய்வதற்காக 11,000 பவுண்டுகளுக்கும் அதிகமான தொகையை சேகரித்துள்ளார்.
கட்டுமானப்பணி செய்யும் ஒருவர், உடைந்த ஜன்னல்களை இலவசமாக புதுப்பித்துக்கொடுத்துள்ளார். அவருக்கு வழக்கமாக ஐஸ்கிரீம் விநியோகிக்கும் ஒருவர், இலவசமாக ஒரு ஐஸ்கிரீம் கேபினட்டையே கொண்டுவந்து கொடுத்துள்ளார்.
சில நாட்களுக்குள் பாலசூரியாவால் மீண்டும் தன் மளிகைக்கடையை திறக்கமுடிந்திருக்கிறது.
இவ்வளவு ஆதரவு கிடைக்கும் என நான் கற்பனை கூட செய்துபார்க்கவில்லை என்கிறார் பாலசூரியா.
தங்கள் பிள்ளைகளை இழந்து வேதனையிலிருக்கும் நிலையிலும், வன்முறைக்கெதிராக சமுதாயம் எதிர்த்துநின்ற விடயம் நம்பிக்கையை உருவாக்கியுள்ளது என்று கூறும் பாலசூரியா, எனக்கு உதவ மக்கள் கொடுத்த பணத்தைவிட, அவர்கள் எனக்கு செய்திகள் மூலமும், வாழ்த்து அட்டைகள் மற்றும் பூங்கொத்துக்கள் மூலமும் எனக்கு காட்டிய ஆதரவு என்னை நெகிழவைக்கிறது என்கிறார்.
முன்பின் தெரியாதவர்களிடமிருந்து கிடைத்த ஆதரவு நம்பமுடியாத அளவில் அமைந்துள்ளது என்கிறார் அவர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |