போர் காரணமாக இலங்கை - ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் தொடர் ரத்து
போர் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருந்த இலங்கை - ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இலங்கை - ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் தொடர்
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு இடையேயான முதல் இருதரப்பு தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் மார்ச் 13 ஆம் திகதி தொடங்கி நடைபெற இருந்தது.

2 அணிகளுக்கு 3 T20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதாக இருந்தது.
T20 உலக கிண்ண தோல்வியையடுத்து, ஆப்கானிஸ்தான் அணியின் அணித்தலைவர் ரஷித் கான் நீக்கப்பட்டு, இப்ராஹிம் ஜத்ரான் தலைமையில் இந்த தொடருக்கான அணி அறிவிக்கப்பட்டது.
மேலும், இலங்கை அணியும் புதிய பயிற்சியாளராக கேரி கிரிஸ்டனை நியமித்துள்ளது.
இந்நிலையில், மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போர் காரணமாக இந்த தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் வீரர்கள் செல்ல முடியாத நிலை, பாதுகாப்பு குறைபாடு உள்ளிட்ட காரணங்களால் ரத்து செய்யப்படுகிறது.

ஆப்கானிஸ்தானில் நிலவும் பாதுகாப்பு குறைபாட்டால், இதுவரை அங்கு ஒரு சர்வதேச போட்டி கூட நடைபெற்றதில்லை. அதன் போட்டிகள் இந்தியா அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும்.
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பதிலடியாக இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை ஈரான் தாக்கி வருகிறது. ஐக்கிய அரபு அமீரகத்திலும், ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |