ஐபிஎல் தொடர் மீண்டும் நடத்த கிடைத்துள்ள அருமையான வாய்ப்பு! தேடி வந்து உதவும் நாடு: பிசிசிஐ ஓகே சொல்லுமா?
கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் ஒத்திவைக்கப்பட்டுள்ள ஐபிஎல் தொடர் நடத்துவதற்கு, பிசிசிஐக்கு அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்தியாவில் 14-வது சீசனுக்கான ஐபிஎல் தொடர் நடைபெற்று வந்தது. ஆனால் நாட்டில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், வீரர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், ஒரு சில வீரர்களுக்கு ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாகவும், ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதுவரை 29 லீக் ஆட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் இன்னும் 31 ஆட்டங்கள் மீதம் உள்ளன.
ஐபிஎல் தொடர் மூலம் ஆண்டு தோறும் பிசிசிஐக்கு 4000 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைத்து வருகிறது. ஆனால் இந்தாண்டு மீதமுள்ள பாதி தொடரை நடத்தி முடிக்காவிட்டால் சுமார் 2500 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் எனவும் போட்டிகளை நடத்த விரைவில் வேறு இடம் பார்க்கப்படும் எனவும் பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஐபிஎல் தொடரை இலங்கையில் நடத்திக்கொள்ளலாம் என செப்டம்பரில் மைதானங்கள் ஒதுக்கப்படும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது.
இதனை இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் உறுப்பினர் அர்ஜுன டி சில்வா தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் மீதமுள்ள 31 போட்டிகளை நடத்த பிசிசிஐயின் தேர்வில் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளது என்பது தெரியும்.
இருப்பினும் போட்டிகள் இலங்கையில் நடத்த முடியாது எனக்கூற எந்த காரணமும் கூறமுடியாது. இலங்கையில் வரும் ஜூலை மாதம் முதல் ஆகஸ்ட் வரை லங்கா ப்ரீமியர் லீக் தொடர் நடத்த திட்டமிட்டு வருகிறோம்.
அதன் பின் செப்டம்பர் மாதத்தில் ஐபிஎல் தொடரை நடத்திக்கொள்ள மைதானங்கள் மற்றும் இதர விஷயங்கள் தயார் நிலையில் இருக்கும் என்று கூறியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் உறுப்பினர் தேர்தல் வரும் மே 20-ஆம் திகதி நடைபெறவுள்ளதால், அர்ஜுன டி சில்வாவை நம்பி பிசிசிஐ முடிவு எடுக்குமா என்பது கேள்வி குறி தான்.