இலங்கையில் மலையக மக்களுக்கு ஆபத்து: விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை
மழை அதிகரிப்பு காரணமாக இலங்கையின் மலையக மக்களுக்கு மீண்டும் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொட்டித் தீர்க்கும் கனமழை
இலங்கையின் கண்டியின் உடுதும்பர பகுதியில் 200 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி இன்று பதிவாகியுள்ளது.

இதன் காரணமாக அப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்த்து வீடுகளிலேயே இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது.
கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கும் கனமழை காரணமாக 8 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு சிவப்பு அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் புவியியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்தார்.
மண்சரிவுக்கான ஆரம்ப அறிகுறிகள்
இந்த மண்சரிவுக்கான எச்சரிக்கை கண்டி மாவட்டத்தில் உள்ள தொலுவ, உடுதும்பர, மடதும்பர, மினிபே மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வலப்பனே, ஹங்குரன்கெத்த, நில்தண்டஹின்ன மற்றும் மதுரட்ட பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் விடுக்கப்பட்டுள்ளது.

சில நாட்களாக கொட்டித் தீர்த்து வரும் கனமழை காரணமாக மேல் குறிப்பிட்ட பல பகுதிகளில் மண்சரிவுக்கான ஆரம்ப அறிகுறிகள் காணப்படுவதால், வீடுகள் மற்றும் கட்டிடங்களில் விரிசல்கள் உள்ள இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்றும் வசந்த சேனாதீர பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
நிலச்சரிவு அல்லது இடிந்து விழும் அபாயம் உள்ளதால், எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள இடங்களைத் தவிர்த்து, தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |