7வது விக்கெட்டுக்கு அதிரடி பார்ட்னர்ஷிப்! அபார வெற்றி பெற்ற இலங்கை கிரிக்கெட் அணி... உற்சாகமடைந்த ரசிகர்கள்
டி-20 உலகக்கோப்பைக்கான பயிற்சிப் போட்டியில் இலங்கை அணி வங்கதேசத்தை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
அக்டோபர் 17 ஆம் திகதி முதல் ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் ஓமானில் டி உலகக்கோப்பை தொடர் நடக்கிறது. இதற்கு முன்னரான பயிற்சி ஆட்டத்தில் இலங்கை - வங்கதேச அணிகள் மோதின. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய வங்கதேச அணி 147 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 148 ரன்கள் என்ற இலக்குடன் இலங்கை விளையாடியது. பின்னர் இலங்கை 19 ஆவது ஓவரில் 4 விக்கெட்டுகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. 7 ஆவது விக்கெட்டுக்காக கைகோர்த்த அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் சமிக்க கருணாரத்ன ஆகியோர் 49 பந்துகளில் 73 ரன்களை பெற்றுக் கொண்டமை வெற்றிக்கு ஒரு முக்கிய காரணியாகும்.
அவிஷ்கா பெர்னாண்டோ 42 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 62 ரன்களை எடுத்து அணியின் வெற்றிக்காக மிகவும் பங்களிப்பாற்றினார். அதேசமயம் சமிக்க கருணாரத்ன 25 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 29 ரன்களை எடுத்தார்.
இலங்கை போட்டியில் வெற்றி பெற்ற போதிலும், அணியின் ஏனைய பேட்ஸ்மேன்கள் எதிர்பார்த்த சேவையை பூர்த்தி செய்யவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும். சமிக்க மற்றும் அவிஷ்கவைத் தவிர பத்தும் நிசங்க மாத்திரம் அதிகபடியாக 15 ஓட்டங்களை எடுத்தார்.
பந்துவீச்சைப் பொறுத்தவரை, இலங்கை அணி ஓரளவு முன்னேறியது. குறிப்பாக துஷ்மந்த சமீரா தனித்து நின்றார். 4 ஓவர்களில் 27 ஓட்டங்களை வழங்கிய வலது கை வேகப்பந்து வீச்சாளரான அவர் எதிரணியின் மூன்று விக்கெட்டுகளையும் தகர்த்தெறிந்தார்.
இப்படியிருந்தாலும் இந்த வெற்றி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது, ஏனெனில் இது இலங்கை வீரர்களுக்கு அடுத்தடுத்த போட்டிகளில் தன்னம்பிக்கையுடன் விளையாட உத்வேகத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இலங்கை மற்றும் பப்புவா நியூ கினியா இடையேயான அடுத்த பயிற்சி ஆட்டம் நாளை அபுதாபியில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.