கைக்குழந்தை உட்பட இலங்கை தமிழர்கள் 8 பேர் தமிழகம் வருகை! வெளியான புகைப்படம்
இலங்கையில் இருந்து 8 பேர் பைபர் படகு மூலம் தமிழகத்திற்கு தஞ்சம் தேடி வந்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்கள் உணவு பொருட்கள், அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
இதனால் கடந்த மார்ச் மாதத்திலிருந்து இலங்கையில் இருந்து அகதிகளாக குடும்பம் குடும்பமாக கடல் வழியாக படகுகளில் தனுஷ்கோடி பகுதிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், இலங்கை கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரகுமார் என்பவர், தனது மனைவி மற்றும் இரண்டு மாத குழந்தையுடனும், யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த கிருபாகரன் என்பவர், தனது மனைவி மற்றும் குழந்தைகள் என 8 பேரும் தலைமன்னாரில் இருந்து பைபர் படகு மூலம் தனுஷ்கோடி அருகே உள்ள மூன்றாவது தீடையில் நேற்று முன்தினம் வந்திறங்கினர்.
இதுபற்றி தகவலறிந்தும் கடலோர காவல் படையினர், ஹோவர் கிராஃப்ட் ரோந்து கப்பல் மூலம் 8 பேரையும் மீட்டு, தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு அழைத்து வந்தனர். விசாரணைக்கு பிறகு 8 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டனர் ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடியில் நேற்று 8 பேர் கைக்குழந்தைகளுடன் வந்த நிலையில், இன்றும் 3 குடும்பங்களைச் சேர்ந்த மேலும் 8 பேர் கைக்குழந்தைகளுடன் வந்துள்ளனர்.
இராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி மணல் திட்டில் இன்று அதிகாலை இலங்கையில் இருந்து, 8 பேர் கை குழந்தைகளுடன் வந்து இறங்கினர். இதுகுறித்த தகவலின் பேரில் அவர்களை மீட்ட கடலோர காவல் படையினர், மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.