ஜேர்மனியில் மூன்று பேரை கத்தியால் குத்திக்கொன்ற நபர்... பொதுமக்களின் துணிச்சல் நடவடிக்கை
ஜேர்மனியில் சோமாலிய நாட்டவர் ஒருவர் மூன்று பேரைக் கத்தியால் குத்திக்கொன்றதுடன், ஆறு பேரை காயப்படுத்தியுள்ளார். நேற்று மாலை 5 மணியளவில், பவேரியாவிலுள்ள Wurzburg நகரில், சோமாலி நாட்டவரான ஒருவர் கையில் கத்தி ஒன்றை வைத்துக்கொண்டு வந்தவர்கள் போனவர்கள் எல்லாரையும் தாக்கியுள்ளார்.
இந்த பயங்கர தாக்குதலில் மூன்று பேர் பலியானார்கள், ஆறு பேர் படுகாயமடைந்தார்கள். காயமடைந்தவர்களில் ஐந்து பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர்கள் பிழைப்பார்களா என்பது குறித்து உறுதியாக கூறமுடியவில்லை என்றும் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்ன வென்றால், சம்பவத்துக்கு சாட்சியாக நின்ற பொதுமக்கள், அந்த நபர் கையில் கத்தி இருப்பது தெரிந்தும் அவரை சுற்றி வளைத்துள்ளார்கள்.
நாற்காலி, கம்பு, மொபைல் போன், குடைகள் முதலான பொருட்களை அவர் மீது வீசி, அவரை சுற்றி வளைத்து ஓட விடாமல் செய்த பொதுமக்கள், பொலிசார் வந்த பிறகு அவர்களை அந்த நபருடம் வழிநடத்திய பிறகே ஓய்ந்திருக்கிறார்கள்.
தாக்குதல் நடத்தியவர், 24 வயதான சோமாலி நாட்டவர் என்ற விடயம் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. அவரது பெயர் முதலான விவரங்கள் வெளியிடப்படவில்லை.
சம்பவத்தைக் கண்ணால் பார்த்த சிலர், அந்த நபர் அல்லாஹூ அக்பர் என கத்தியதாக தெரிவிக்கிறார்கள். ஆனால், அவர் இதற்குமுன் எந்த தீவிரவாத தாக்குதலுடனும் தொடர்புடையவர் என தெரியவரவில்லை என்று பொலிசார் கூறியுள்ளதால் அந்த நபரின் தாக்குதலுக்கான நோக்கம் தெரியவில்லை.
ஆயுதம் தாங்கிய பொலிசார், அந்த நபரை துப்பாக்கியால் காலில் சுட்டுத்தான் பிடிக்க முடிந்திருக்கிறது. காலில் காயத்துடன் கைது செய்யப்பட்ட அந்த நபரிடம் பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.