லண்டன் பேருந்து சாரதியின் மரணத்துக்கு மருத்துவமனை ஊழியர்களே காரணம்: விசாரணையில் வெளியான திடுக்கிடவைக்கும் தகவல்
லண்டனில் பேருந்து சாரதியாக பணியாற்றிவந்த ஆறு பிள்ளைகளின் தந்தையான ஒருவரின் மரணத்துக்கு பிரித்தானிய மருத்துவமனை ஊழியர்களின் தவறு காரணம் என தெரியவந்துள்ளது.
லண்டனில் பேருந்து சாரதியாக பணியாற்றிவந்த கிஷோர்குமார் பட்டேல் (58), கொரோனா காரணமாக மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.
கொரோனா தவிர்த்து வேறு எந்த பிரச்சினையும் இல்லாத, உடல் ரீதியாக ஆரோக்கியமாக இருந்த கிஷோர்குமார் 19 நாட்களுக்குப் பின் இறந்துபோனார்.
55 வயதில் குங் பூ சண்டை கற்று, பிளாக் பெல்ட் வாங்கி, ஆரோக்கியமாக இருந்த கிஷோர்குமாரின் மரணம் அவரது குடும்பத்தினரை அதிர்ச்சியடையவைத்தது.
இதற்கிடையில், கிஷோர்குமார் உட்பட குறிப்பிட்ட மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 10 நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டிருந்த வென்டிலேட்டர்களில் தவறான பில்டர்கள் பொருத்தப்பட்டிருந்ததை மருத்துவர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.
ஆனால், அதற்குள், சிறுநீரகங்கள் முதல் பல உள்ளுறுப்புகள் செயலிழந்து, மாரடைப்பும் ஏற்பட்டு, இறுதியில் இறந்துபோன கிஷோர்குமாருடன்கூட, இதே பிரச்சினையால் இறந்துபோனவர்களின் எண்ணிக்கை மூன்று!
இந்த தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, நீதிமன்றம் சார்பில் விசாரணை அதிகாரி ஒருவர் இந்த மரணங்கள் குறித்து விசாரணையில் இறங்கினார்.
அவரது விசாரணையின் முடிவில், வென்டிலேட்டர்களில் தவறான பில்டர்கள் பொருத்தப்பட்டிருந்ததும் கிஷோர்குமாரின் உயிரிழப்புக்கு காரணம், அதாவது, அவரது இறப்புக்கு மருத்துவமனை ஊழியர்களும் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயன்பாட்டிலிருந்த இரண்டு வகையான பில்டர்கள் ஒரே நிறத்தில் காணப்பட்ட நிலையில், மருத்துவமனை ஊழியர்கள் தவறான பில்டரை கொரோனா நோயாளிகளின் வென்டிலேட்டர்களில் பொருத்தியிருக்கிறார்கள் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இந்த மரணங்கள் தொடர்பாக மருத்துவமனை மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவில்லை.