ஜேர்மனியில் வாழும் இந்தியப்பெண்ணின் குடும்பத்துக்கே விஷம் வைத்த நபர்
இந்தியப்பெண் ஒருவர், தனது பேத்தியின் பிறந்தநாளுக்காக தான் தயாரித்த இனிப்பு ஒன்றில், தன் அலுவலகத்தில் வேலை செய்யும் ஊழியர் ஒருவர் விஷம் கலந்ததாக பொலிசில் புகார் செய்துள்ளார்.
பேத்தி பிறந்ததைக் கொண்டாடச் சென்ற பெண்
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் ரச்னா கபூர் (49). Global Vision Network என்னும் நிறுவனத்தின் இயக்குநராக பொறுப்பு வகிக்கிறார் அவர்.
ஜேர்மனியில் வாழும் தன் மகளுக்கு குழந்தை பிறந்துள்ளதால், பேத்தி பிறந்ததைக் கொண்டாடுவதற்காக இனிப்பு ஒன்றை தயாரித்து ஜேர்மனிக்கு கொண்டு சென்றுள்ளார் ரச்னா.

அந்த இனிப்பை சாப்பிட்ட ரச்னாவின் மகளான ரஞ்சிதா பத்ரா, அவரது மாமனார், மாமியார், கணவரின் சகோதரர், சகோதரி என பலருக்கும் உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அவர்கள் அனைவரும் ஹாம்பர்கில் உள்ள ஒரு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
அவர்கள் அனைவருடைய உடலிலும் தாலியம் (thallium) என்னும் நச்சுப்பொருள் கலந்துள்ளது தெரியவந்துள்ளது.
சோகம் என்னவென்றால், பிறந்து சில நாட்களே ஆன ரச்னாவின் பேத்தி தாய்ப்பால் மட்டுமே உட்கொள்ளும் நிலையில், அந்தக் குழந்தையின் உடலிலும் அந்த ரசாயனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ரச்னாவும் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், விமானம் மூலம் அவர் இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளார். அவருக்கும் புதுடெல்லியிலுள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
விஷம் வைத்த நபர்
இந்நிலையில், தனது அலுவலக ஊழியரான அமித் துபே என்னும் நபரே தான் தயாரித்த இனிப்பில் விஷம் கலந்ததாக ரச்னா குற்றம் சாட்டியுள்ளார்.
தனது வீட்டின் மாடியில் அமித் தங்குவதற்கு தான் ஒரு அறை ஒதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ள ரச்னா, தான் ஜேர்மனிக்கு புறப்படும்போது தன் வீட்டில் அமித் மட்டுமே இருந்ததாகவும், ஆகவே, அவர்தான் இனிப்பில் விஷம் கலந்திருக்கவேண்டும் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
தனது குடும்பத்தினர் உடல் நலம் பாதிக்கப்பட்டதும், ஜேர்மனியிலிருந்து இந்தியாவிலிருக்கும் அமித்தை மொபைல் மூலம் தொடர்புகொண்டாராம் ரச்னா. நன்றாக பேசிக்கொண்டிருந்த அமித், விஷம் குறித்து விசாரித்ததும் அமைதியாகிவிட்டதுடன், எங்கோ மாயமாகிவிட்டாராம்.
அவரது மூன்று மொபைல் போன்களும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், ரச்னா வீட்டிலிருந்த, முக்கிய ஆவணங்கள், காசோலை புத்தகம், அலுவலக முத்திரை, letterhead முதலான பல்வேறு விடயங்களும் மாயமாகியுள்ளனவாம்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |