இந்தியாவை பின்னோக்கி இழுத்துச் செல்ல தீவிர முயற்சிகள் நடக்கிறது - முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாட்டை நாசப்படுத்தத் துடிக்கும் கூட்டத்தை வேரடி மண்ணோடு வீழ்த்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்றது.
இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், கனிமொழி எம்.பி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "கலைஞர், பேராசிரியருக்கு பிறகு என்னை வழிநடத்துபவர் கி.வீரமணி. திராவிடர் கழகத்திற்கு எதிராக தொடங்கியது அல்ல திமுக; திராவிடர் கழகத்தின் நீட்சி தான் திமுக.
சிலர் திமுகவைப் பிடிக்காது எனச் சொல்லுவார்கள். அதற்குப் பொருள் ஒடுக்கப்பட்ட வீட்டுக் குழந்தைகள் படிப்பது பிடிக்காது. இந்த இனத்தில் இருந்து படித்து முன்னேறி ஐஏஎஸ், ஐபிஎஸ் என ஆவது பிடிக்காது.
இடஒதுக்கீடு பிடிக்காது, சமூக நீதி பிடிக்காது, சமத்துவம் பிடிக்காது, சரிசமமாக உட்காருவது பிடிக்காது. எல்லோரும் கோவிலுக்குள் நுழைவது பிடிக்காது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராவது பிடிக்காது. ஒற்றுமையா இருப்பது பிடிக்காது. தமிழ் பிடிக்காது, தமிழர்கள் பிடிக்காது. தலைநிமிர்ந்து நடப்பது பிடிக்காது.
சுயமரியாதை இயக்கம் தேடித்தந்த பேரை பறிப்பதற்கு சூழ்ச்சி நடந்துகொண்டிருக்கிறது. அறிவியலை பின்னுக்குத்தள்ளி, பிற்போக்குத்தனங்களையும் ஆதிக்கத்தையும் மீண்டும் நிலைநிறுத்த சூழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கிறது.
பவள விழா, நூற்றாண்டு விழா கொண்டாடுகிறார்கள் ஆனால் இங்கு எதுவும் மாறவில்லையே என சிலர் கேட்கிறார்கள். அவர்களின் கேள்வியில் இருப்பது அக்கறை அல்ல.. ஆணவம்.
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நாங்கள் உருவாக்கிய கட்டமைப்பை உங்களால் உடைக்க முடியவில்லை பாருங்கள் என விடுக்கின்ற சவால். இந்த 100 ஆண்டுகளில் நாம் மாற்றத்திற்கான விதைகளை மட்டும்தான் விதைத்திருக்கிறோம்.
திராவிட மாடல்
தமிழ்நாட்டை மட்டுமல்ல, இந்தியாவையும் ஒரு நூற்றாண்டுக்கு பின்னோக்கி இழுத்துச் செல்ல நுணுக்கமாகவும் தீவிரமாகவும் முயற்சிகள் நடக்கிறது. இதையெல்லாம் தடுத்து நிறுத்துகிற அரண்தான் திராவிடமாடல்.
அதனால் தான் அண்ணாவும், கலைஞரும் சொல்லாததை இந்த ஸ்டாலின் ஏன் செய்கிறான் என டென்ஷன் ஆகிறான். அவனுக்கு எரியட்டும்னு தான் திராவிட மாடல்னு திரும்ப திரும்ப சொல்றேன்.அடுத்து திராவிட மாடல் 2.0 என சொல்ல போறோம்.
வரப்போவது அரசியல் தேர்தல் கிடையாது. தமிழினம் தன்னைக் காத்துக்கொள்ளப்போவதற்கான சமுதாயத் தேர்தல். தமிழ்நாட்டை நாசப்படுத்தத் துடிக்கும் கூட்டத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்த வேண்டும்.
அதற்கான கொள்கை தெளிவும், போராட்ட குணமும், செயல்திட்டமும், ஒற்றுமை உணர்வும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தான் இருக்கிறது. தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம் என உறுதியேற்போம், தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்" என பேசினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |