அவர்கள் கடவுச்சீட்டுகளில் இனி ஆபத்து முத்திரை குத்தப்படும்: பிரித்தானியாவில் புதிய நகர்வு
பிரித்தானியாவில் தண்டனை பெற்ற பாலியல் குற்றவாளிகளின் ஓட்டுநர் உரிமம் மற்றும் கடவுச்சீட்டுகளில் இனி "ஆபத்து" எச்சரிக்கை முத்திரை பதிவு செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் அவர்கள் தங்கள் பெயரை மாற்றிக்கொள்ளவோ, இனி சிறார்களை நெருங்கவோ முடியாமல் போகும் என கூறப்படுகிறது.
தொழிலாளர் கட்சியின் Sarah Champion இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். மட்டுமின்றி பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்டுள்ள 100,000 பாலியல் குற்றவாளிகள் தொடர்பில் கடவுச்சீட்டு அலுவலகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
மேலும், இதனால் சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை அவர்களால் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தவும் முடியாமல் போகும் என தாம் நம்புவதாக Sarah Champion தெரிவித்துள்ளார்.
தண்டனை பெற்ற பாலியல் குற்றவாளிகளின் ஆவணங்களில் ஆபத்து எச்சரிக்கை பதிவு செய்யப்பட்டால், அவர்கள் ஒவ்வொரு முறையும் தங்கள் பெயரை மாற்றிக்கொள்ள முற்படும்போது, அது அதிகாரிகளுக்கு தெரியவரும் என்கிறார் அவர்.
பெயர் மாற்றிக்கொள்வதால், பாலியல் குற்றவாளிகள் கண்காணிப்பில் இருந்து மறைந்து விடுகின்றனர் என குறிப்பிட்டுள்ள அவர், இனி அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டால், சிறார்கள் மீதான பாலியல் குற்றங்களை பெருமளவில் தடுக்க முடியும் என்கிறார்.
6 வயதில் துஷ்பிரயோகத்திற்கு இலக்கான Della Wright என்பவரது பெயரில் இந்த சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் எனவும் Sarah Champion சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது 47 வயதாகும் Della Wright விவகாரத்தில் சிக்கிய நபர் பல ஆண்டுகளில் 6 முறை தமது பெயரை மாற்றிக்கொண்டுள்ளார்.
பிரித்தானியாவை பொறுத்தமட்டில் 42.44 பவுண்டுகள் செலுத்தினால் தமது பெயரை மொத்த ஆவணங்களிலும் மாற்றிக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.