ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் அவுஸ்திரேலிய பிரபலம்
2015-க்குப் பிறகு முதல்முறையாக ஐபிஎல் போட்டியில் பங்கேற்க அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் விருப்பம் தெரிவித்துள்ளார்.
2014, 2015 ஆண்டுகளில் ஆர்சிபி அணிக்காக ஐபிஎல் போட்டியில் விளையாடியுள்ளார் ஸ்டார்க். 27 ஆட்டங்களில் 34 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். கடந்த சில வருடங்களாக ஐபிஎல் போட்டி நடைபெறும் ஏப்ரல், மே மாதங்களைத் தன் குடும்பத்தினருடன் செலவழிக்கப் பயன்படுத்திக்கொள்கிறார் ஸ்டார்க்.
அவருடைய மனைவி அலிஸா ஹீலி, அவுஸ்திரேலிய மகளிர் அணியின் விக்கெட் கீப்பராக உள்ளார். இந்த நிலையில் பிப்ரவரியில் நடைபெறும் மெகா ஐபிஎல் ஏலத்தில் கலந்துகொள்ள ஸ்டார்க் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் ஐபிஎல் 2022 போட்டியில் கலந்துகொள்ள அவர் முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. இதுபற்றி ஸ்டார்க் தெரிவிக்கையில், ஐபிஎல் ஏலத்தில் கலந்துகொள்வது தொடர்பாக ஆவணங்களைத் தயார்படுத்த எனக்கு இரு நாள்கள் தேவைப்படும்.
என்னுடைய பெயரை இன்னும் நான் அளிக்கவில்லை. இதுதொடர்பாக முடிவெடுக்க எனக்குச் சில நாட்கள் உள்ளன. கடந்த ஆறு வருடங்களாக ஐபிஎல் போட்டியில் விளையாடவில்லை.
இனி எத்தனை சர்வதேசப் போட்டிகள் இருந்தாலும் ஐபிஎல் போட்டியில் விளையாடும் எண்ணத்தில் உள்ளேன்.
இந்த வருடம் டி20 உலகக் கிண்ணம் நடைபெறுவதால் ஐபிஎல் போட்டியில் பங்கேற்பது பற்றி யோசிக்கலாம் என்றார்.