பதவி விலகும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ள ஸ்டார்மர்... ஆன்டி பர்னாமுக்கு வாய்ப்பு
நிலைமை மோசமாக இருப்பதை உணர்ந்துள்ள சர் கெய்ர் ஸ்டார்மர் பிரதமர் பதவியை ராஜினாமா செய்யும் நிலையில் உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பரிசீலித்து வருகிறார்
கடும் அரசியல் நெருக்கடியில் சிக்கியுள்ள பிரதமர் ஸ்டார்மர் தனது நிலை குறித்து வார இறுதியில் ஆலோசித்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது.
மேலும், மேக்கர்ஃபீல்டில் ஆன்டி பர்னாம் பெற்ற மகத்தான வெற்றிக்குப் பிறகு, அவரை எதிர்கொள்ள போதுமான ஆதரவைத் திரட்ட ஸ்டார்மரால் முடியுமா என்பதும் கேள்விக்குறியாக மாறியுள்ளது.
ஆனால், நாட்டிற்கு எது சிறந்தது என்பதை சர் கெய்ர் ஸ்டார்மர் பரிசீலித்து வருகிறார்; தலைமைத்துவத்திற்கான போட்டி தனது கட்சியையும் அரசாங்கத்தையும் குழப்பத்தில் ஆழ்த்திவிடக்கூடும் என்று அவர் கவலைப்படுகிறார்.
மூத்த அரசியல்வாதி ஒருவர் தெரிவிக்கையில், தனது பதவியை அவர் தக்கவைக்க தொடர்ந்து சண்டையிடுவதற்கு 25 சதவீத வாய்ப்பு மட்டுமே இருப்பதாக நினைக்கிறேன் என்றார். ஸ்டார்மர் இதுவரை இறுதி முடிவெடுக்கவில்லை என்றே தகவல் கசிந்துள்ளது.
ஆனால், தனது முடிவை எடுப்பதற்கு முன்னதாக, வார இறுதியில் செக்கர்ஸில் (Chequers) தனது மனைவி விக்டோரியாவுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
தமக்கு எதிராக முன்னெடுக்கப்படும் எந்தவொரு தலைமைத்துவப் போட்டியையும் எதிர்கொண்டு, பதவியில் நீடிப்பேன் என்று அவர் பகிரங்கமாக வலியுறுத்தியுள்ளார்.
ஆனால், ஆன்டி பர்னாம் பெற்ற மகத்தான வெற்றிக்குப் பிறகு அவரது கணிப்புகள் மொத்தமாக மாறிவிட்டதாகவே, பல மூத்த அரசியல்வாதிகள் குறிப்பிடுகின்றனர்.
பிரதமராக பர்னாம்
ஆன்டி பிரமிக்கத்தக்க வகையில் 55 சதவீத வாக்குகளைப் பெற்று மகத்தான வெற்றி பெற்றார் – இதனால், ரிஃபார்ம் யுகே வெறும் 35 சதவீத வாக்குகளுடன் இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டது.
வெள்ளிக்கிழமையன்று தனது நெருங்கிய அமைச்சரவை சகாக்கள் மற்றும் மூத்த கூட்டாளிகளுடன் தொடர்ச்சியான சந்திப்புகளையும் தொலைபேசி உரையாடல்களையும் ஸ்டார்மர் நடத்தியுள்ளார்.
இதனிடையே, நாட்டின் புதிய பிரதமராக பர்னாம் பதவியேற்க வழிவகுக்கும் வகையில், பதவியிலிருந்து விலகுவதற்கான ஒரு கால அட்டவணையை வகுக்க வேண்டும் என்று போக்குவரத்துச் செயலாளர் ஹைடி அலெக்சாண்டர் பிரதமர் ஸ்டார்மரிடம் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையைச் சேர்ந்த மற்றவர்களும் நிலைமை மோசமடைந்துவிட்டதாகக் கருதுவதோடு, அவர் பதவி விலகுவதற்கான கால அட்டவணையை வகுக்க வேண்டும் என்றும் நினைக்கிறார்கள்.
ஆனால், லேபர் கட்சியின் தீவிர விசுவாசிகளான சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் ஸ்டார்மர் பதவியில் நீடிக்க வேண்டும் என்று இன்னும் கருதுவதுடன், அவருக்கு எதிரான கவிழ்ப்பு முயற்சியைக் கண்டு அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |