முடிவுக்கு வருகிறதா கொரோனா? பிரித்தானியாவில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ள புள்ளிவிவரங்கள்
பிரித்தானியாவில் தொடர்ச்சியாக ஏழாவது நாளாக கொரோனா தொற்றுக்கு ஆளாகுவோரின் எண்ணிக்கை குறைந்து வருவது நம்பிக்கையை ஏற்படுத்துவதாக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், பிரித்தானியாவில் 129,587 பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார்கள். ஆனால், கடந்த புதன்கிழமையை ஒப்பிடும்போது தற்போது கொரோனா தொற்றுக்கு ஆளாகுவோரின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளது அரசின் புள்ளிவிவரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.
தென்னாப்பிரிக்காவில் Omicron வகை கொரோனா தொற்று முதலில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், ஒரு மாதத்திற்கும் முன்பே அங்கு கொரோனா தொற்று எண்ணிக்கை வீழ்ச்சியடையத் தொடங்கிவிட்டது.
தற்போது, அதே நிலை பிரித்தானியாவிலும் உருவாகியுள்ளதோ என எண்ணும் வகையில், பிரித்தானியாவிலும் தொடர்ச்சியாக கொரோனா தொற்று குறையத் தொடங்கியுள்ளது.
நேற்று பிரித்தானியாவில் 398 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்கள். இந்த எண்ணிக்கை கடந்த வாரத்தை ஒப்பிடும்போது ஐந்தில் ஒரு பாகம் அதிகம்தான். ஆனால், கடந்த ஜனவரியை ஒப்பிடும்போது இறப்பு எண்ணிக்கை ஐந்து மடங்கு குறைவு ஆகும்.
ஆனால், கொரோனாவால் தினசரி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது, அது குறைந்து வருவது தெரிகிறது.
Omicron மையப்புள்ளியாக கருதப்படும் லண்டனில், தொடர்ச்சியாக 10 நாட்களாக கொரோனா காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருவது, நாடு முழுமைக்கும் ஒரு நல்ல அறிகுறியாக காணப்படுகிறது.
ஒரு விடயம் என்னவென்றால், நாடு முழுவதும் இந்த எண்ணிக்கை சீராக இல்லை. அதாவது, சில பகுதிகளில் இன்னமும் கொரோனா காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்தும் வருகிறது.
ஆனால், மொத்தமாக பிரித்தானியாவைப் பார்க்கும்போது, இந்த Omicron தொற்று காரணமாக மருத்துவமனைகள் நிரம்பி, முன்போல் அழுத்தத்திற்கு ஆளாகிவிட நேரிடுமோ என்று அஞ்சிய நிலை நிதர்சனமாகவில்லை.
சொல்லப்போனால், தென்னாப்பிரிக்காவில் கொரோனா தொற்று குறைந்து வருவதாக செய்திகள் வெளியானபோது, இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அலுவலரான Sir Chris Whitty, அதை நிராகரித்துவிட்டார். அதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.
ஆனால், இப்போது அவரிடமிருந்தே நேர்மறையான கருத்துக்கள் வரத்துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.