தயவுசெஞ்சு நிறுத்துங்கயா.. நான் அவரில்லை! நொந்து போன இந்திய வீரர்.. அனுதாபத்துடன் வாழ்த்து தெரிவித்த கேப்டன்
பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கின் பெயரை கொண்டுள்ள இந்திய கால்பந்து வீரர், சமூகவலைதளங்களில் தன்னை தவறுதலாக டேக் செய்வதை நிறுத்துமாறு செய்தி ஊடகங்களை, பத்திரிகையாளர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
கேப்டன் அமரீந்தர் சிங் கடந்த செப்டம்பர் 18ம் திகதி பஞசாப் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
அன்று முதல் கேப்டன் அமரீந்தர் சிங்கின் அடுத்தகட்ட திட்டம் குறித்து வெளியாகும் செய்திகளை பத்திரிகையாளர்கள் மற்றும் செய்தி ஊடகங்கள் தங்கள் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் அவரை டேக் செய்து பதிவிட்டு வருகின்றனர்.
இதில் பல பேர் கேப்டன் அமரீந்தர் சிங்கை டேக் செய்வதற்கு பதிலாக தவறுதலாக அவர் பெயரையே கொண்டுள்ள இந்திய கால்பந்து வீரரை டேக் செய்து வந்துள்ளனர்.
சமூகவலைதளங்களில் தான் தொடர்ந்து தவறுதலாக டேக் செய்யப்படுவதால் நொந்து போன இந்திய கால்பந்து வீரர் அமரீந்தர் சிங், தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அதை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து இந்தியா கால்பந்து வீரர் அமரீந்தர் சிங் பதிவிட்டதாவது, அன்பார்ந்த செய்தி ஊடகங்களே, பத்திரிகையாளர்களே, நான் அமரீந்தர் சிங், இந்திய கால்பந்து அணியின் கோல் கீப்பர், பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அல்ல.
தயவு செய்து என்னை டேக் செய்வதை நிறுத்துங்கள் என இந்தியா கால்பந்து வீரர் அமரீந்தர் சிங் வலியுறுத்தியுள்ளார்.
I empathise with you, my young friend. Good luck for your games ahead. https://t.co/MRy4aodJMx
— Capt.Amarinder Singh (@capt_amarinder) September 30, 2021
பஞ்சாப் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்கும் கால்பந்து வீரர் ட்விட்டுக்கு பதிலளித்துள்ளார்.
என் இளம் நண்பரே, நான் உங்களுக்காக அனுதாபப்படுகிறேன். எதிர்வரும் போட்டிகளில் நீங்கள் சிறப்பாக விளையாட வாழ்த்துக்கள் என கேப்டன் அமரீந்தர் சிங் கூறியுள்ளார்.