சிறுநீரகம் மற்றும் கல்லீரல் விற்பனைக்கு- பிரபல பாடகர் விளம்பரம்! நெஞ்சை உருக்கும் சோகம்
கேரளாவில் கொரோனா பரவலால் வருமானம் இழந்து சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் மாற்றுத்திறனாளி தெருப்பாடகர் தனது சிறுநீரகம் மற்றும் கல்லீரலை விற்க விளம்பரம் கொடுத்துள்ளது மனதை உருக்கும் விதமாக அமைந்துள்ளது.
திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் ரொனால்ட் (52). தெருப்பாடகரான இவரின் கால்கள் முடங்கி போயுள்ளதோடு, கைகளிலும் பிரச்சினை உள்ளது. இவருடன் நோய்வாய்ப்பட்ட அவரின் மருமகனும் உள்ளார்.
இந்த நிலையில் கொரோனா காரணமாக வருமானம் இன்றி தவிக்கும் ரொனால்ட் தனது இரு சக்கர வாகனத்தில் தன்னுடைய சிறுநீரகம் மற்றும் கல்லீரல் விற்பனைக்கு என விளம்பரம் கொடுத்துள்ளார்.
அவர் கூறுகையில், என் ஸ்கூட்டர் தான் எனக்கு வீடு, கொரோனாவுக்கு முன்னர் பாடல்கள் பாடி ரூ 700 சம்பாதிப்பேன். ஆனால் கொரோனாவுக்கு பின்னர் எனக்கு வருமானமே இல்லை. என் மகள் தமிழ் நபர் ஒருவருடன் சென்றுவிட்டாள், என் மகன் சிறையில் உள்ளான், மனைவி 5 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்.
நான் என்னையும் கவனித்து கொண்டு என் மருமகனுக்கும் சிகிச்சையளிக்க வேண்டும். அதனால் தான் என் உடல் உறுப்புகளை விற்பனை செய்ய முடிவெடுத்தேன்.
இது தொடர்பாக மருத்துவமனைகளுக்கு சென்றும் அங்கு ஏஜண்ட்களை பிடிக்க முடியவில்லை, இதையடுத்தே என் வாகனத்தில் விளம்பரம் கொடுத்தேன்.
சாப்பாட்டுக்கு கூட வழியில்லை, இந்த பகுதியில் உள்ள தொழிலாளர்கள் அவர்கள் சாப்பிட்டு தூக்கி போட்டும் மிச்சத்தை எடுத்து தான் சாப்பிட்டு வருகிறேன்.
செல்போன் இல்லாமல் ஒன்றும் செய்யமுடியாது என தெரியும், ஒருவர் கொடுத்த பணத்தை வைத்தே செல்போன் வாங்கினேன்.
இப்போது வாழ்வை கடத்த என் உடல் உறுப்புகளை வாங்க யாராவது வருவார்களா என காத்திருக்கிறேன் என கூறியுள்ளார்.