செங்கல்பட்டில் ராக்கெட் லாஞ்சர் வெடித்ததில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு
செங்கல்பட்டில் ராக்கெட் லாஞ்சர் வெடித்ததில் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வெடித்த ராக்கெட் லாஞ்சர்
செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் அருகே அனுமந்தபுரம் கிராமத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் உள்ளது.

இங்கு பொத்தேரியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் 4ம் ஆண்டு பொறியியல் படிக்கும் 6 மாணவர்கள் நேற்று அனுமந்தபுரத்தில் உள்ள மலை பகுதிக்கு 3 மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
மலை உச்சியை அடைந்த நிலையில், அங்கு வெடிக்காமல் கிடந்த ராக்கெட் லாஞ்சரை பெங்களூருவை சேர்ந்த ஹீமான்யூ யாதவ் என்ற மாணவர் காலால் எட்டி உதைத்துள்ளார்.
அதில், அந்த ராக்கெட் லாஞ்சர் பாறை ஒன்றின் மீது பட்டு வெடித்துள்ளது.
மாணவர் உயிரிழப்பு
இதில், மார்பு, தோள்பட்டை, கை ஆகியவற்றில் பலத்த காயமடைந்த ஹீமான்யூ யாதவ் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். ஹீமான்யூ யாதவின் தந்தை ரமேஷ் சிங், பெங்களூருவில் விமானப்படையில் பணியாற்றி வருகிறார்.
விஷால் வேணுகோபால் (21) என்பவருக்கு இடது கையின் விரல்கள் மற்றும் கைப்பகுதியில் கடுமையான காயங்கள் ஏற்பட்டன. ஆர்யன் ஷர்மா, கிருஷ்ணா சிராஜ் மகாஜன், நிஷ்காஸ் நிராஜ் ஆகியோர் லேசான காயமடைந்துள்ளனர். விராட் சஞ்சய் குமார் (23) என்பவர் காயமின்றி தப்பினார்.
விபத்து குறித்து தகவலறிந்த சிங்கப்பெருமாள் கோவில் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிரிழந்த மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காயமடைந்தவர்கள் பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு நடத்தினர்.
இந்த சம்பவம் செங்கல்பட்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |