ஜேர்மனியில் திடீரென கத்திக்குத்து தாக்குதல் நிகழ்த்திய நபர்: மாணவர்கள் துணிந்து எடுத்த நடவடிக்கை
ஜேர்மன் நகர பல்கலை ஒன்றில், திடீரென ஒருவர் கத்தியால் தாக்குதல் நிகழ்த்திய நிலையில், மாணவர்கள் துணிச்சலாக அவரை மடக்கிப் பிடித்தனர்.
ஜேர்மனியின் Hamm நகரில் அமைந்துள்ள Hamm-Lippstadt பல்கலைக்கழகத்தில் நேற்று திடீரென ஒருவர் கத்தியால் தாக்குதல் நிகழ்த்தத் துவங்கியதில் நான்கு பேருக்கு காயம் ஏற்பட்டது.
ஆனால், மாணவர்கள் அவரை இலாவகமாக மடக்கிப் பிடித்துவிட்டார்கள். பொலிசார் வரும் வரை அவரை விடவில்லை அவர்கள்.
அந்த நபருக்கு 34 வயது என்பதைத் தவிர, பொலிசார் அவரைக் குறித்து வேறு எந்த தகவலும் வெளியிடவில்லை.
இந்த சம்பவத்தில், மூன்று பெண்களுக்கும் ஒரு ஆணுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் ஒருவரது நிலைமை மோசமாக இருப்பதால் அவர் உடனடியாக ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
ஏற்கனவே சில நாட்களுக்கு முன் ஜேர்மன் தலைநகரில் கார் ஒன்று நடைபாதையில் சென்றுகொண்டிருந்தவர்கள் மீது வேண்டுமென்றே மோதியதில், ஒரு ஆசிரியை கொல்லப்பட்டதுடன், சுமார் 14 மாணவர்கள் உட்பட 30 பேர் காயமடைந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளதையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.