ஜேர்மன் மாகாணமொன்றில் தடுப்பூசி பெறாதவர்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைகளுக்கு செல்ல தடை
ஜேர்மன் மாகாணமாகிய Hesse, கொரோனா தடுப்பூசி பெறாதவர்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைகளுக்கு செல்ல தடை விதித்துள்ளது.
அதன்படி, ஃப்ராங்பர்ட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிகள், கொரோனா தடுப்பூசி பெற்றவர்கள் மட்டுமே கடைகளுக்குள் அனுமதிக்கப்படும் வகையில் விதிகளை அமுல்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மன் மாகாணங்களில் பாதி, இப்போது, உணவகங்கள், மதுபான விடுதிகள், இரவு விடுதிகள், திரையரங்குகள் முதலான இடங்களில் தடுப்பூசி பெற்றவர்கள் அல்லது கொரோனாவிலிருந்து விடுபட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி என்னும் விதியைக் கடைப்பிடிக்கின்றன.
இன்னும் ஒரு படி இந்த விதிகளை கடுமையாக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ள Hesse அரசாங்கம், சில கடைகளில் தடுப்பூசி பெறாதவர்களை அனுமதிக்க தடை விதிக்க, அந்த துறையின் கோரிக்கையின்பேரில் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ஒருபக்கம், இந்த விதிகள் குறித்து கருத்துவேறுபாடுகள் இல்லாமலில்லை.
இன்னொரு பக்கம், மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் பிரச்சினை ஏற்படக்கூடாது என்பதற்காக, கொரோனா காலகட்டம் முழுவதுமே அதிகாரிகள் இத்தகைய கட்டுப்பாடுகளிலிருந்து பல்பொருள் அங்காடிகளுக்கும் மளிகைக் கடைகளுக்கும் விதிவிலக்கு அளித்துவந்தார்கள்.
ஆனால், இன்னும் பல மில்லியன் ஜேர்மானியர்கள் கொரோனா தடுப்பூசி பெறாததால், குளிர்காலம் வேறு நெருங்கி வருவதையும் கருத்தில் கொண்டு, மக்களின் அன்றாட வாழ்வில் முக்கியப் பங்கு வகிக்கும் இடங்களுக்கு செல்வதையும் கடினமாக்குவதன் மூலம் அவர்களை தடுப்பூசி பெறவைப்பதற்காக, அவர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் தற்போது அதிகாரிகள் இந்த நடவடிக்கையை கையில் எடுத்துள்ளார்கள்.