பேரறிவாளன் விடுதலை தீர்ப்பை உச்சநீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்! வலியுறுத்திய பிரபலம்
பேரறிவாளன் விடுதலை செய்வதாக அளித்துள்ள தீர்ப்பை உச்சநீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டு காலம் சிறையிலிருந்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் கடந்த 2 தினங்களுக்கு முன்பு விடுதலை செய்தது. இதனை பல்வேறு தமிழ் அமைப்புகள் வரவேற்றாலும் காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் மற்றும் புதுவையில் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதன்படி இன்று புதுச்சேரி காங்கிரஸ் மாநில தலைவர் ஏ.வி சுப்பிரமணியன் தலைமையில் இந்திராகாந்தி சிலையில் ஒன்று கூடியவர்கள் ராஜீவ் காந்தி சிலை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டுச் சென்று அங்கே பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
பேரறிவாளன் விடுதலை குறித்து மறைமுக கருத்து! ராஜிவ்காந்தி நினைவு நாளில் ராகுல்காந்தி முக்கிய பதிவு
இதில் புதுச்சேரி முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி, எம்.பி வைத்திலிங்கம், உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட காங்கிரஸார் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
நாராயணசாமி கூறும்போது , பேரறிவாளனை விடுதலை செய்தது ஏற்றுக்கொள்ள முடியாதது. நீதிமன்றம் மன்னித்தாலும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள். மேலும் சிறையில் உள்ள 6 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைப்பவர்கள் வக்கிரபுத்தி காரர்கள்.
இந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.