இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்! வாட்ஸ் அப்பிற்கு எச்சரிக்கை விடுத்த உச்சநீதிமன்றம்
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பின்பற்ற முடியவில்லை என்றால் நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்று வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு எச்சரிக்கை
தரவு பகிர்வு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், நீதிபதி சூர்ய காந்த் வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதில், இந்திய குடிமக்களின் எந்தவொரு தரவும் பகிரப்படுவதையும், தனியுரிமை மீறப்படுவதையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று காட்டமாக தெரிவித்ததுடன், இந்திய அரசியலமைப்பை பின்பற்ற முடியவில்லை என்றால் நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்று எச்சரித்துள்ளார்.
மேலும் இந்திய குடிமக்களின் தனியுரிமை உடன் நாங்கள் விளையாட முடியாது, சிறிய இலக்க தரவுகளை கூட நீங்கள் பகிர்வதை எங்களால் அனுமதிக்க முடியாது என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் உங்கள் கொள்கையின் மொழி ஒரு சாதாரண பயனரால் புரிந்து கொள்ள முடியாத வகையில் தான் உள்ளது என்றும். இந்தியாவில் உள்ள சாதாரண பழ வியாபாரியை நினைத்து பாருங்கள், அவரால் எப்படி உங்களது விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை தேர்வு செய்யவோ அல்லது நிராகரிக்கவோ முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

இறுதியில், உங்களுக்கு இரண்டு தீர்வு தான் உள்ளது. ஒன்று தரவுப் பகிர்வு இருக்காது என்று நீங்கள் உறுதிமொழிப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் அல்லது உங்களின் இந்த வழக்கை தள்ளுபடி செய்து விடுவோம் என்று நீதிபதி சூர்ய காந்த் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |