மொத்தம் 17 முறை... பிரித்தானிய எம்.பியை தாக்கியவர் தொடர்பில் வெளிவரும் அதிர்ச்சி பின்னணி
பிரித்தானிய எம்.பி. சர் டேவிட் அமெஸ் கொடூரமாக கொல்லப்பட்ட விவகாரத்தில், சந்தேக நபரின் விசித்திர நடவடிக்கை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
சர் டேவிட் அமெஸ் தமது தொகுதி தொடர்பான கூட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே தாக்குதல் நடந்துள்ளது. தேவாலயத்திற்குள் நுழைந்த அந்த தாக்குதல்தாரி, வாய்ப்புக்காக பொறுமையாக காத்திருந்துள்ளார்.
பின்னர் மறைத்து வைத்திருந்த கத்தியால், மொத்தம் 17 முறை சர் டேவிட் அமெஸ் எம்.பியை தாக்கிய பின்னர், பொறுமையாக பொலிசார் வரும் வரையில் அந்த தேவாலயத்தில் காத்திருந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
வெள்ளிக்கிழமை சுமார் 12.05 மணியளவில் நடந்த இந்த கொடூர சம்பவத்தை இரண்டு பெண் ஊழியர்கள் நேரடியாக பார்த்துள்ளதும் தெரிய வந்துள்ளது. அந்த இரு பெண் ஊழியர்களுமே, சம்பவத்தை நேரில் பார்த்து, அலறியபடி வெளியேறி பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதேவேளை, அந்த தாக்குதல்தாரி தேவாலயத்தின் உள்ளே பொறுமையாக காத்திருந்துள்ளார். தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார், அந்த 25 வயது பிரித்தானிய குடிமகனை கைது செய்ததுடன், தாக்குதலுக்கு பயன்படுத்திய ஆயுதத்தையும் கைப்பற்றியுள்ளனர்.
சோமாலியா வம்சாவளியை சேர்ந்த அந்த நபர் இஸ்லாமிய தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்டவர் என்றே கூறப்படுகிறது. மேலும், சர் டேவிட் அமெஸ் எம்.பியை சந்திக்க வேண்டும் என அந்த இளைஞர் ஏற்கனவே முன் அனுமதியும் பெற்றுள்ளார்.
இதனால் இது ஒரு திட்டமிடப்பட்ட கொலை என்றே சர் டேவிட் அமெஸ் நண்பர்களும் உடன் பணியாற்றுபவர்களும் குறிப்பிட்டுள்ளனர்.