மக்கள் மனதை உலுக்கிய சுவாதி - ராம்குமார் வழக்கு! பெற்றோர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் முக்கிய உத்தரவு
சுவாதி கொலை வழக்கில் அலட்சியமாக நடந்த ரயில்வே நிர்வாகம் இழப்பீடு தர பெற்றோர் கோரிக்கை.
மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்.
தமிழகத்தை உலுக்கிய சுவாதி கொலை வழக்கில் இழப்பீடு கேட்டு அவரின் பெற்றோர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2016ல் சென்னை நுங்கம்பாக்கம், ரெயில் நிலையத்தில் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டவர் சுவாதி. இவரை கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட ராம்குமார் என்பவர் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ரத்தில் சுவாதியின் பெற்றோர்களான சந்தானகோபாலகிருஷ்ணன், ரெங்கநாயகி ஆகியோர் தாக்கல் செய்த மனுவில் எங்கள் மகள் சுவாதி,கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் 24ல் காலையில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்தபோது கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பான விவரங்களுக்குள் செல்ல விரும்பவில்லை. ஆனால், சுவாதிக்கு தெற்கு ரயில்வே நிர்வாகம் பாதுகாப்பு வழங்கி இருக்க வேண்டும். அந்த ரயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமராவும் இல்லை. டிக்கெட் பரிசோதகரும் இல்லை. என் மகள் படுகொலை செய்யப்பட்டதற்கு தெற்கு ரயில்வே நிர்வாகத்தின் அலட்சியம் ஒரு காரணம் என்பதால், எங்களுக்கு ரூ.3 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை நீதிமன்றம் விசாரித்தது. அப்போது, சுவாதியின் கொலை திட்டமிட்டு நடந்தது. ரயில்வே நிர்வாகம் பயணிகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்கி வருகிறது என்று ரயில்வே நிர்வாகம் சார்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து, இந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி, மனுதாரர் இழப்பீடு கேட்டு சிவில் வழக்கு தொடராலாம் என தெரிவித்தார்.