தமிழகத்தை உலுக்கிய ஸ்வாதி - ராம்குமார் வழக்கில் 5 ஆண்டுகள் கழித்து அதிரடி திருப்பம்! ராம்குமார் மரணம் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்
தமிழகத்தை உலுக்கிய ஸ்வாதி - ராம்குமார் வழக்கில் 5 ஆண்டுகளுக்கு பின்னர் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது, அதன்படி ராம்குமார் மின்சாரம் தாக்கி இறந்தார் என்பதற்கான எந்த ஆதாரமும் உடலில் இல்லை என மனித உரிமைகள் ஆணையம் முன் உடற்கூராய்வு செய்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
கடந்த 2016ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் திகதி காலை சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஸ்வாதி என்ற இளம்பெண் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். குற்றவாளியை தேடிவந்த போலீஸார் ஜூலை 1ஆம் திகதி செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞரை கைது செய்தது. அப்போதே அவர் பிளேடால் கழுத்தை அறுத்துக் கொள்ள முயற்சித்ததாக கூறப்பட்டது.
ராம்குமார் ஸ்வாதியை ஒரு தலையாக காதலித்ததாக பொலிஸ் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் அது குறித்து வேறெந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. இதனால் ராம்குமார் கைது செய்யப்பட்டதிலும் சர்ச்சை கிளம்பியது. புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார் அதே ஆண்டு செப்டம்பர் 18ஆம் திகதி மின்சார வயரை கடித்து தற்கொலை செய்துகொண்டதாக பொலிசார் தரப்பில் கூறப்பட்டது.
ஸ்வாதி கொலை வழக்கின் மர்மமே விலகாத நிலையில் ராம்குமாரி தற்கொலை மேலும் சந்தேகங்களையும் சர்ச்சையையும் கிளப்பியது. ஐந்து ஆண்டுகளான போதும் இந்த வழக்கு முடிந்தபாடில்லை, மர்மமும் விலகவில்லை.
இந்த வழக்கை தற்போது பொலிசார் மீண்டும் தூசுதட்டப் போவதாக சொல்லப்படுகிறது. அதாவது கோடநாடு கொலை- கொள்ளை சம்பவத்தின் மர்ம மரணங்கள் மீண்டும் விசாரிக்கப்படுவதைப் போல ஸ்வாதி கொலை-ராம்குமார் மர்ம மரண விவகாரமும் இப்போது உயிர்ப்பிக்கப்படுகிறது.
இந்த நிலையில் ஸ்வாதியை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டு, தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்ட ராம்குமாரின் உடலை உடற்கூறாய்வு செய்த மருத்துவர்கள் 2 பேர் மனித உரிமை ஆணையத்தில் தற்போது ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.
அவர்களின் வாக்குமூலம் வருமாறு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பேராசிரியராக பணியாற்றிய போது 7.10.2016 அன்று ராம்குமார் உடன் உடற்கூறாய்வுக்கு வந்தது. அந்த நபரின் மூளை மற்றும் இதர உறுப்புகள் திசு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இந்த பணியில் நானும் மருத்துவர் வேணு ஆனந்த் என்பவரும் இருந்தோம்.
ஆய்வில், அந்த நபரின் உடலில் மின்சாரம் பாய்ந்ததற்கான அறிகுறி காணப்படவில்லை. எங்களது பரிசோதனை அறிக்கையில், மூளை திசு பரிசோதனை செய்ததில் நல்ல நிலையில் இருந்தது. இதய திசுக்களை பரிசோதனை செய்ததில் அதுவும் நல்ல நிலையில் இருந்தது.
நுரையீரல், கல்லீரல், மண்ணீரல், மேலுதடு, கீழுதடு, சிறுநீரகம் போன்றவற்றின் திசுக்களை பரிசோதனை செய்ததிலும், அவர் உடலில் மின்சாரம் பாய்ந்ததற்கான அறிகுறிகள் தென்படவில்லை. அனைத்து உறுப்புகளும் நல்ல நிலையில் இருந்ததாக சான்று வழங்கி இருக்கிறோம்.
அதற்காக நாங்கள் வழங்கிய சான்று நகல் தான் சி4 ஆகும் என்று அதை காண்பித்துள்ளனர். இந்த விவகாரம் தற்போது மீண்டும் சூடுபிடித்துள்ளது. உண்மையிலேயே ஸ்வாதியை கொலை செய்தது ராம்குமார்தானா? அப்படியென்றால் அதற்கான ஆதாரங்களை காவல்துறையினர் இதுவரை வெளியிடவில்லையே ஏன்? ராம்குமார் மின்சாரம் தாக்கி உயிரிழந்தாக காவல்துறையினர் கூறிய நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கை, அவரது மரணம் மின்சாரத்தில் நடைபெறவில்லை என்று தெரிவித்து உள்ளது.
அப்படியென்றால், ராம்குமார், சிறையில் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டரா? என்று அடுக்கடுக்கான கேள்விகள் தற்போது சமூகவலைதளங்களில் எழுப்பப்பட்டு வருகிறது.