தூங்கும்போது மின்விசிறி பயன்படுத்துவது ஆபத்தா? சுவிஸ் மருத்துவர்கள் விளக்கம்
தூங்கும்போது மின்விசிறி பயன்படுத்துவதால் வைரஸ்கள் பரவுவதாக கூறப்படும் விடயத்துக்கு ஜெனீவா மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளார்கள்.
மின்விசிறி பயன்படுத்துவதால் வைரஸ்கள் பரவுமா?
மக்களை ஏதாவது சொல்லி எப்போதும் பயத்திலேயே வைத்திருக்கும் ஒரு கூட்டம் பல நாடுகளில் உள்ளது.
அவ்வகையில், தூங்கும்போது மின்விசிறி பயன்படுத்துவதால் வைரஸ்கள் பரவும் என ஒரு செய்தி பரவியுள்ளது.

அதற்கேற்ப, மின்விசிறி பயன்படுத்தும் சிலருக்கு தொண்டையில் கமறல் அல்லது கரகரப்பு ஏற்பட, அட, ஆமாம், தொண்டை பாதிக்கப்பட்டுள்ளதே, வைரஸ் பரவுவது உண்மைதானோ என பயப்பட ஆரம்பித்துவிட்டார்கள் அவர்கள்.
சுவிஸ் மருத்துவர்கள் விளக்கம்
இந்நிலையில், மின்விசிறியால் வைரஸ்கள் பரவாது என்றும், தூங்கும்போது மின்விசிறி பயன்படுத்துவது பாதுகாப்பானதுதான் என்றும் ஜெனீவா பல்கலை நுரையீரல் தொற்று சிகிச்சை நிபுணரான Louise Bondeelle என்பவர் கூறியுள்ளார்.
அறையில் மின்விசிறி போட்டுக்கொண்டு தூங்கும்போது தொண்டையில் கமறல் அல்லது கரகரப்பு ஏற்படுவதற்குக் காரணம், அறையில் ஈரப்பதம் குறைவாக உள்ளதால்தானேயொழிய, வைரஸ் பரவுவதால் அல்ல என விளக்கமளித்துள்ளார்கள் மருத்துவர்கள்.
மின்விசிறிகள் தூசியையோ அல்லது அலர்ஜியை ஏற்படுத்தும் விடயங்களையோ பரப்பாது என்று கூறியுள்ள அவர்கள், அப்படி அலர்ஜி பிரச்சினை உடையவர்கள், மின்விசிறியின் பிளேடுகளை சுத்தம் செய்துகொள்வது உதவும் என்கிறார்கள்.
சொல்லப்போனால், மின்விசிறியால் நன்மைதான் என்று கூறும் மருத்துவர்கள், உடல் சூட்டை வியர்வை மூலமாக வெளியேற்ற மின்விசிறி உதவும் என்றும், உடல் வெப்பநிலையையும், இதயத்துடிப்பையும் குறைக்கவும் மின்விசிறிகள் உதவும் என்றும் கூறியுள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |