புலம்பெயர்தல் தொடர்பில் சுவிட்சர்லாந்து அரசு அதிரடி நடவடிக்கை
சுவிஸ் கட்சி ஒன்று புலம்பெயர்தலுக்கு எதிரான பிரேரணை ஒன்றை முன்வைத்துள்ள நிலையில், சுவிஸ் அரசு அதற்கெதிராக அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.
புலம்பெயர்தலுக்கு எதிரான பிரேரணை
புலம்பெயர்தலுக்கு எதிராக குரல் கொடுத்துவரும் சுவிஸ் மக்கள் கட்சி என்னும் கட்சி, சுவிட்சர்லாந்தின் மக்கள்தொகையை 10 மில்லியனுக்கு மேல் அதிகரிக்கக்கூடாது (No to 10 Million Switzerland) என்னுமொரு பிரேரணையை முன்வைத்துள்ளது.

அதாவது, புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதன்மூலம், சுவிட்சர்லாந்தின் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தவேண்டும் என அக்கட்சி கோரி வருகிறது.
புலம்பெயர்ந்தோரால் வீடுகள் தட்டுப்பாடு, போக்குவரத்து நெரிசல் மற்றும் சுவிஸ் மக்களுக்கு வேலை கிடைப்பதில் பிரச்சினை ஏற்படுவதாகக் கூறி இந்த பிரேரணையை சுவிஸ் மக்கள் கட்சி முன்வைத்துள்ளது.
சுவிஸ் அரசு அதிரடி
இந்நிலையில், சுவிஸ் மக்கள் கட்சி முன்வைத்துள்ள பிரேரணைக்கு எதிராக, சுவிஸ் அரசு ஒரு பிரச்சாரத்தை முன்வைத்துள்ளது.
சுவிட்சர்லாந்தை ஆளும் சுவிஸ் ஃபெடரல் கவுன்சில் உறுப்பினரும், சுவிஸ் நீதித்துறை அமைச்சருமான Beat Jans, ஃபெடரல் அரசு சார்பில், No to 10 Million Switzerland என்னும் பிரேரணைக்கெதிரான பிரச்சாரத்தை துவக்கியுள்ளார்.

அது குறித்து Bernஇல் உரையாற்றிய அவர், சுவிஸ் மக்கள் கட்சியின் பிரேரணை, ஐரோப்பிய ஒன்றியத்துடனான இருதரப்பு ஒப்பந்தங்களை பாதிக்கும் என்று எச்சரித்துள்ளார்.
அத்துடன், சுவிஸ் மக்கள் கட்சியின் பிரேரணையால், நாட்டில், குறிப்பாக, கிராமப்புறங்களிலும், மருத்துவத்துறையிலும், பணியாளர்கள் தட்டுப்பாடு நிலைமை மேலும் மோசமாகும் என மாகாண அரசுகளும், பணி வழங்குவோரும் கூட எச்சரித்துள்ளனர்.
புலம்பெயர்தலுக்கு எதிரான சுவிஸ் மக்கள் கட்சியின், சுவிட்சர்லாந்தின் மக்கள்தொகையை 10 மில்லியனுக்கு மேல் அதிகரிக்கக்கூடாது (No to 10 Million Switzerland) என்னும் பிரேரணை, வரும் ஜூன் மாதம் 14ஆம் திகதி வாக்கெடுப்புக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |