உணவுப் பொருட்கள் முதல் உடல் நலம் வரை... சுவிட்சர்லாந்தின் மீது வெப்பம் ஏற்படுத்தும் தாக்கம்
சுவிட்சர்லாந்து தற்போது வரலாறு காணாத வெப்ப அலையின் பிடியில் சிக்கியுள்ளது. வெப்பநிலை உயர்வால், உணவுப் பாதுகாப்பு, பொது சுகாதாரம், மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற பல விடயங்கள் பாதிப்புக்குள்ளாகக்கூடிய ஒரு பன்முனை நெருக்கடியை எதிர்கொள்கிறது சுவிட்சர்லாந்து!
உணவுப் பொருட்கள் முதல் உடல் நலம் வரை...
சுவிஸ் விவசாயத் துறை ஒரு பயங்கர நீர் பற்றாக்குறையை எதிர்கொள்வதால், மக்களுடைய உணவுக்கான செலவு உயரப் போகிறது.
வறட்சி காரணமாக, பல காய்கறிகளுக்கு தட்டுப்பாடு உருவாகப்போகிறது. சுவிஸ் உணவின் முக்கிய அங்கமாகவும், தேசிய அடையாளத்தின் அடித்தளமாகவும் விளங்கும் உருளைக்கிழங்கும் அவற்றில் ஒன்றாகியுள்ளது.

கோடையின் வெப்பத்திலிருந்து தப்புவதற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் சுவிட்சர்லாந்துக்குச் செல்வார்கள். ஆனால், மழையின்மையால் பசுமையான ஆல்ப்ஸ் மலைப்பகுதிகள் எளிதில் தீப்பற்றக்கூடியவையாக இன்று மாறியுள்ளன.
இன்னொரு முக்கிய விடயம் என்னவென்றால், இந்த கடும் வெப்ப அலையின்போது மக்கள் தினமும் எடுத்துக்கொள்ளும் மருந்துகளே அவர்களுக்கு மிகப்பெரிய எதிரியாக மாறலாம்.
அதாவது, அதிக வெப்பநிலையானது, பொதுவான மருந்துகளின் விளைவுகளை அபாயகரமாக அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ கூடும்.
குறிப்பாக, சிறுநீர்ப்பெருக்கிகள் மற்றும் மலமிளக்கிகள் விரைவான நீரிழப்பைத் தூண்டுவதால், அவற்றால் ஆபத்து ஏற்படலாம் என்கிறார்கள் மருந்தாளுநர்கள்.
அதே நேரத்தில், மன அழுத்த எதிர்ப்பு மருந்துகள் மற்றும் இரத்த அழுத்த மருந்துகள், உடலின் உள் வெப்பநிலையைச் சீராக்கும் இயற்கையான திறனைச் சீர்குலைக்கக்கூடும்.

குறிப்பாக இது முதியவர்களுக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் பிரச்சினையை ஏற்படுத்தும் விடயம் என்றாலும், இந்த மருந்துகளை எடுத்துக்கொள்ளும் அனைவருக்குமே இந்த அபாயம் ஏற்படலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.
இந்த வெப்ப அலையால் இன்னொரு பெரிய ஆபத்து என்னவென்றால், நாடு முழுவதும் காட்டுத்தீ ஏற்படும் அபாயகரமான நிலை உருவாகியுள்ளதால், சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற காடுகள் தற்போது பெரும் ஆபத்தில் உள்ளன.

நீண்டகால வறட்சி மற்றும் கடும் வெப்பம் ஆகியவை இணைந்து பேரழிவு தரும் தீ விபத்துகளுக்கு உகந்த சூழலை உருவாக்கியுள்ளது. அங்கு, ஒரு சிறு தீப்பொறி கூட கட்டுப்படுத்த முடியாத ஒரு பெரும் காட்டுத்தீயாக மாறிவிடக்கூடும்.
செங்குத்தான நிலப்பரப்பு மற்றும் காற்றின் போக்கு காரணமாக, ஆல்ப்ஸ் மலைப் பகுதிகள் தீ வேகமாகப் பரவுவதற்கு எளிதில் ஆளாகக்கூடியவை என்பதால், அதிகாரிகள் முன்னெப்போதும் இல்லாத விழிப்புணர்வுடன் அப்பகுதிகளைக் கண்காணித்து வருகின்றனர்.
அத்தகைய நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, உள்ளூர் அரசாங்கங்கள், திறந்தவெளிகளில் தீப்பற்றவைத்தல் மற்றும் பட்டாசுகளுக்குக் கடுமையான தடைகளை விதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |