உடலில் ஆக்சிஜன் அளவு குறைவதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் என்ன?
கொரோனா நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளாகுபவர்களில் பலர் ஆக்சிஜன்பற்றாக்குறையால் உயிரிழக்கும் சூழல் நிலவுகிறது. ஏனெனில் கொரோனா சுவாச நோயாக இருப்பதால் சுவாச மண்டலத்தின் ஆரோக்கியமான செயல்பாடுகளை சீர்குலைக்கிறது.
அதன் காரணமாக ரத்தத்தில் கலந்திருக்கும் ஆக்சிஜன் அளவும் குறைய தொடங்குகிறது.
அதற்கு தக்க சமயத்தில் சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் கடும் ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும். எனவே இந்த காலகட்டத்தில் உடலில் ஆக்சிஜன் அளவை கண்காணிப்பது அவசியம்.
அந்தவகையில் உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்து கொண்டிருப்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.
- உடலில் போதுமான அளவு ஆக்சிஜன் இல்லாதபோது ஒருவரால் இயல்பாக செயல்பட முடியாது. சுவாசிக்க முடியாமல் அவதிப்படுவார். அப்படிப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
- உடலில் ஆக்சிஜன் அளவு குறையும்போது மார்பு வலி உண்டாகக்கூடும். மார்பு நெரிசல் பிரச்சினையும் எட்டிப்பார்க்கும். நுரையீரல் மற்றும் சுவாசக்குழாய்களில் சளி படர்வது மார்பு நெரிசலுக்கு காரணமாக அமையும். இருமலும் சேர்ந்து அடர்த்தியான சளியை வெளியே கொண்டு வரும். சுவாசிக்கும்போது ஒருவிதமான ஒலியும் வெளிப்படக்கூடும். மூச்சுத்திணறலையும் உணரக்கூடும்.
- உடலில் ஆக்சிஜன் அளவு குறையும்போது எதிலும் போதிய கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். சிந்தனை திறனும் பலவீனமடையும். மன குழப்பமும், தலைவலியும் ஒருசேர வாட்டிவதைக்கும். இவை ஆக்சிஜன் அளவு குறைந்து கொண்டிருப்பதை தீர்மானிக்கும் அடையாளமாக இருக்கலாம்.
- உதடுகள் நீல நிறமாகவோ அல்லது நிற மாற்றமாகவோ காட்சியளிப்பதும் உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்து இருப்பதை குறிக்கும். இந்த மாற்றம், சயனோசிஸ் என்றும் அழைக்கப்படுகிறது. போதுமான அளவு ஆக்சிஜன் இல்லாதவர்கள், நாளங்களுக்குள் அதிக அளவு ஆக்சிஜனேற்றப்பட்ட ஹீமோகுளோபின் கொண்டிருப்பவர்களுக்கு நீல நிறத்தில் உதடுகள் காட்சியளிக்கலாம்.
- உடலில் ஆக்சிஜன் அளவு குறையும்போது மூச்சு விடுவதில் பாதிப்பு நேரும். வழக்கமாக சுவாசிக்கும்போது மூக்கு இயல்பாக இருக்கும். ஆனால் சுவாசத்தில் பிரச்சினை ஏற்படும்போது மூக்கின் முனைப்பகுதிகள் இரண்டும் விரிவடையும். நாசிப்பாதையின் திறப்பும் வழக்கத்தை விட விரிவடைந்திருக்கும். இத்தகைய அறிகுறிகள் உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்திருப்பதையும், சுவாசிப்பதில் இருக்கும் சிரமத்தையும் வெளிப்படுத்தக்கூடியவை.