இறக்குமதி செய்யப்பட்ட ரசாயனம் சேப்பாக்கம் மைதானத்தில் தெளிப்பு! வாழ்வா சாவா போராட்டத்தில் இந்தியா
டி20 உலகக் கோப்பையில் இந்தியா - ஜிம்பாப்வே அணிக்கு இடையிலான போட்டிக்காக சென்னை எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் பிரத்யேகமான ரசாயனம் ஒன்று தெளிக்கப்படுகிறது.
வாழ்வா சாவா போராட்டம்
டி20 உலகக் கோப்பையில் சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான மோசமான தோல்விக்கு பிறகு இந்திய அணி ஜிம்பாப்வே அணியை வியாழக்கிழமையான இன்று எதிர்கொள்கிறது.
ஜிம்பாப்வே-க்கு எதிரான இந்த போட்டி மற்றும் அடுத்து வரும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டி என இரண்டு போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய சூழ்நிலைக்கு இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் அரையிறுதிக்கு முன்னேற வேண்டும் என்றால் மற்ற அணிகளின் வெற்றி தோல்விக்காகவும் இந்திய அணி காத்திருக்க வேண்டிய சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது.
சேப்பாக்கம் மைதானத்தில் புதிய தொழில்நுட்ப ரசாயனம் தெளிப்பு
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இந்திய அணியின் போட்டி சென்னை எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் வைத்து நடைபெறும் நிலையில், ஆட்டத்தின் போது அதிக பனிப்பொழிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆட்டத்தின் போது மைதானத்தில் ஈரப்பதம் 80% முதல் 90% வரை இருக்கும் என்பதால் இந்து பந்துவீச்சாளர்களுக்கு பந்தை கிரீப் செய்வதிலும், யார்க்கர்கள் வீசுவதிலும் சிரமத்தை ஏற்படுத்தும்.
இந்நிலையில் அதிகமான பனிப்பொழிவு மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றை சமாளிப்பதற்காக அமெரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட “டியூ கியூர்”(Dew Cure) என்ற புதிய ரசாயனம் சேப்பாக்கம் மைதானம் முழுவதும் வீசப்படுகிறது.
இந்தியா - ஜிம்பாப்வே போட்டிக்காக கடந்த செவ்வாய்க்கிழமை முதல் இந்த “டியூ கியூர்” ரசாயனம் மைதானத்தில் தெளிக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் போட்டியின் இரண்டாம் பாதியில் உருவாக வாய்ப்பு இருக்கும் அதிகப்படியான ஈரப்பதம் மற்றும் பனிப்பொழிவு தாக்கம் குறைக்கப்பட்டு, பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கு சமநிலையை ஏற்படுத்த உதவும் என்று தெரியவந்துள்ளது.
அதிகமான பனி பொழிவு இருக்கும் என்றால் இன்றைய போட்டியின் போது நாணய சுழற்சியில் வெற்றி பெறும் அணி கேப்டன்கள் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNELல் இணையுங்கள் |