ஜேர்மனியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தாலிபான்கள்: பேச்சு வார்த்தையில் உடன்பாடு
ஆகத்து 31க்குப் பிறகும் ஆப்கானிஸ்தான் நாட்டவர்கள் நாட்டை விட்டு வெளியேற அனுமதியளிக்கப்படும் என தாலிபான்களுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக ஜேர்மனி தெரிவித்துள்ளது.
அமெரிக்கப் படைகள் வெளியேற ஆகத்து 31 அன்று கெடுவிதிக்கப்பட்டுள்ள நிலையிலும், முறையான ஆவணங்கள் வைத்திருக்கும் ஆப்கன் நாட்டவர்கள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற அனுமதியளிக்கப்படும் என தாலிபான்கள் தரப்பில் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட ஒருவர் நேற்று தெரிவித்துள்ள்ளார்.
ஜேர்மன் தூதரான Markus Potzel, தான் தாலிபான் தரப்பிலிருந்து Sher Mohammad Abbas Stanikzai என்பவருடன் நடத்திய பேச்சு வார்த்தையில், அவர் முறையான ஆவணங்கள் உடைய ஆப்கன் நாட்டவர்கள், ஆகத்து 31க்குப் பிறகும் வர்த்தக விமானங்கள் மூலம் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என தன்னிடம் உறுதியளித்ததாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கப் படைகள் ஆப்கனைவிட்டு வெளியேறிய பிறகு, தற்போது நேட்டோ கூட்டு நாடுகளுடன் இணைந்து பாதுகாப்பு தேவைப்படும் ஆப்கன் நாட்டவர்களை வெளியேற்றும் இந்த நடவடிக்கை தொடர இயலாது என்று பெர்லின் தெரிவித்துள்ளது.
ஆனால், மனித உரிமை ஆர்வலர்கள், ஜேர்மன் ஏஜன்சிகளில் முன்பு அலுவலர்களாக பணிபுரிந்த ஆப்கன் நாட்டவர்கள் முதலான ஆபத்திலிருக்கும் ஆப்கானிஸ்தானியர்களுக்கு ஆகத்து 31க்குப் பிறகும் நாட்டை விட்டு வெளியேற வாய்ப்பு அளிக்கப்படும் என்பதை உறுதி செய்ய விரும்புவதாக ஜேர்மனி தெரிவித்துள்ளது.