ஜேர்மன் ஊடகவியலாளர்களின் வீடுகளில் தாலிபான்கள் நடத்திய ரெய்டு: ஒருவர் சுட்டுக்கொலை
தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் வீடு வீடாகச் சென்று அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளுடன் பணியாற்றியவர்களை தேடி வருகின்றனர்.
அப்படி அவர்கள் ஜேர்மன் ஊடகவியலாளர்களுக்குச் சொந்தமான மூன்று வீடுகளில் நடத்திய ரெய்டு ஒன்றில், ஜேர்மன் ஊடகவியலாளர் ஒருவரின் உறவினர் ஒருவர் தாலிபான்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
மற்றொரு ஊடகவியலாளரின் உறவினர் கடுமையாக தாக்கப்பட்டுள்ள நிலையில், அவர் படுகாயமடைந்த நிலையில் தற்போது ஜேர்மனி வந்தடைந்துவிட்டதாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தாலிபான்கள் வீடு வீடாகச் சென்று சோதனையிடுவதுடன், காபூல் விமான நிலையம் வழியாக நாட்டை விட்டு வெளியேற முயற்சிப்போரையும் சோதனையிட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆக, பொது மன்னிப்பு வழங்கப்படும், அனைவருக்கும் பாதுகாப்பு வழங்கப்படும் என தாலிபான்கள் அளித்த வாக்குறுதிகள் எல்லாம் காற்றோடு போய்விடுவது உறுதி என்ற அச்சத்தை இந்த ரெய்டுகள் உருவாக்கியுள்ளதை மறுக்க இயலாது.