தாலிபான்களுடன் பேசுங்கள்... சாதித்ததை இழந்து விடாதீர்கள்: ஏஞ்சலா மெர்க்கல் உருக்கம்
ஆப்கானிஸ்தான் நலனை கருத்தில் கொண்டு தாலிபான்களுடன் பேச்சுவார்த்தையை தொடர அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் முன் வர வேண்டும் என ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் நாட்டை இரண்டே வாரத்தில் துப்பாக்கி முனையில் தாலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றி உள்ளனர். இந்த நிலையில் தாலிபான் கொடுங்கோல் ஆட்சிக்கு அஞ்சி, ஆயிரக்கணக்கான மக்கள் நாட்டில் இருந்து வெளியேற முயற்சித்து வருகின்றனர்.
அமெரிக்கா, கனடா, சுவிஸ் உட்பட பல்வேறு நாடுகளும் காபூலில் சிக்கியுள்ள தங்கள் நாட்டு மக்களை விமானத்தை அனுப்பி மீட்டு வருகின்றன. ஆப்கானிஸ்தானில் இருந்து ராணுவத்தை திரும்பப் பெறுவதற்கு ஆகஸ்ட் 31ம் திகதி காலக்கெடுவாக அமெரிக்கா நிர்ணயித்துள்ளது.
அதற்குள் ராணுவ வீரர்கள் மட்டுமின்றி தங்கள் நாட்டு குடிமக்களையும் அழைத்து வந்து விட வேண்டும் என்ற இலக்குடன் அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. ஆனால் குறித்த திகதியை தள்ளிப்போட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு நேச நாடுகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன.
இந்த நிலையில் ஆப்கன் நலனை கருத்தில் கொண்டு தாலிபான்களுடன் பேச்சுவார்த்தையை தொடர அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் முன் வர வேண்டும் என ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் ஜேர்மன் நாடாளுமன்றத்தில் பேசுகையில், கடந்த 20 ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட மாற்றங்களின் அடிப்படையில் எதைச் சாதித்தோமோ அதை முடிந்தவரை பாதுகாப்பதே குறிக்கோளாக இருக்க வேண்டும் என்றார்.
மேலும், சர்வதேச சமூகம் தாலிபான்களுடன் பேச வேண்டும். ஏனென்றால் இந்த கடினமா நேரத்தில் இதனை செய்யாவிட்டால் ஆப்கானிஸ்தானில் நீதி மற்றும் அமைதியை ஏற்படுத்த முடியாது என்பதை உறுதியாக நம்புகிறேன் என்றார்.
மட்டுமின்றி, பத்தாண்டுகளுக்கு முன்னர் 20 சதவிகித மக்களுக்கே குடிநீர் கிடைத்திருந்த நிலையில், தற்போது அது 70 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. 2011ல் ஆப்கானிஸ்தான் மக்களில் 10ல் இருவருக்கு மின்சார வசதி கிடைத்திருந்த நிலையில் தற்போது பத்தில் 9 பேர்களுக்கு அந்த வசதி சாத்தியமாகியுள்ளது.
தாலிபான்கள் கையில் ஆட்சி அதிகாரம் சிக்கியுள்ளது ஏற்க முடியாத ஒன்று தான், ஆனால் அதை நாம் எதிர்கொண்டே ஆக வேண்டும் என்றார் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல்.