குழந்தைகள் விஜயை அண்ணா என்று அழைப்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது: வேல்முருகன் பேச்சுக்கு தமிழிசை கண்டனம்
வேல் முருகன் கொச்சைப் பேச்சை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என்று தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழிசை கண்டனம்
சமீபத்தில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய் குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவரின் கருத்துக்கு தமிழக வெற்றி கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் பா.ஜ.க. முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், "சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் கொச்சையான பேச்சை கண்டிக்கிறேன்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஊக்கம் தரும் அளவிற்கு ஒரு நிகழ்ச்சி நடத்துகிறார். சில நேரங்களில் அதில் அவர் பேசிய அரசியல் கருத்துக்களில் கூட எனக்கு மாறுபாடு உண்டு.
ஆனால் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியரை அதிகம் சந்தித்து அவர்களின் அறிவுத்தாகத்தை அறிந்தவள் என்ற வகையில் அவர்களுக்கு ஊக்கம் அளிப்பதை நான் வரவேற்கிறேன். தமிழ் அழகானது உங்கள் மனது தான் அழுக்கானது.
குழந்தைகள் அவரை அண்ணா என்று அழைப்பது தமிழில் அன்பின் வெளிப்பாடு மட்டுமே, இது அரசியலுக்கு அப்பாற்பட்ட அழைப்பு. ஆனால் அந்த உறவை கொச்சைப்படுத்துவது அந்த குழந்தைகளின் மனதை புண்படுத்துவது மட்டுமல்லாமல் அவர்களுக்கு ஆதரவளிக்கும் பெற்றோர்களின் மனதையும் புண்படுத்துவது ஆகும்.
தாங்கள் இவ்வாறு புண்படுத்துவது தமிழ் பண்பாடும் இல்லை மனித நேயமும் அல்ல. வேல் முருகன் அவர்களின் கொச்சைப் பேச்சை நான் வன்மையாக கண்டிக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |