மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கிற்கு சட்டமன்றத்தில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம்!
மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்குக்கு தமிழக சட்டமன்றத்தில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த 16-வது சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
இந்நிலையில், புதிய சட்டசபையின் முதல் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தொடரில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். முதலில் சில வார்த்தைகள் தமிழில் பேசினார். அப்போது, “காலை வணக்கம். எளிமையான வாழ்க்கை வாழுங்கள். அது ஊழலை அகற்றிவிடும். இது எனது செய்தி. தமிழ் இனிமையான மொழி” என்றார். ஆளுநரின் உரையில் வேளாண்மைக்கு தனி பட்ஜெட் போடப்படும், உழவர் சந்தைக்கு புத்துயிர், அரசு வேலை வாய்ப்பில் தமிழில் படித்தவர்களுக்கு முன்னுரிமை போன்ற முக்கிய சிறப்பம்சங்கள் இடம்பெற்றன.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வரும் 24ஆம் திகதி வரை 3 நாட்கள் நடத்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், தமிழக சட்டசபை கூட்டத் தொடரின், 2 வது நாளான இன்று மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விவேக், எழுத்தாளர் கி.ராஜநாராயணன், துளசி அய்யா வாண்டையார், காளியண்ணன் மறைவுக்கு இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. மேலும் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறும் என தெரிவிக்கப்படுள்ளது.