விஜய் மக்கள் இயக்கம் நாம் தமிழர் கட்சிக்கு போட்டியா? ரூ.1,800 கோடி சொத்து? சீமான் பேட்டி
நிதி நெருக்கடி காரணமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 65 சதவீத இடங்களில் மட்டுமே நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறது என்று சீமான் கூறியுள்ளார்.
இதுகுறித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், தமிழக மக்கள் லஞ்சம், ஊழலற்ற புதிய நல்லாட்சி வேண்டும் என விரும்புகிறார்கள். கடந்த 50 ஆண்டு காலமாக மாறி மாறி ஆட்சி செய்தாலும் வெள்ளம் தொடர்பான பிரச்சினைக்கான தீர்வு இதுவரை காண முடியவில்லை.
பல்வேறு இடங்களில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற முடியாமல் தூய்மை இந்தியா என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல், துணிப்பை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றால் மஞ்சப்பை கொண்டு வந்தால் போதுமா? பச்சைப் பை கொண்டு வரக் கூடாதா? இதற்கு முதல் கட்டமாக பாலித்தீன், பிளாஸ்டிக் உற்பத்தியை தடை செய்ய வேண்டும்.
நடிகர் விஜய் என் தம்பி, அவருடைய கோட்பாடு வேறு, என்னுடைய கோட்பாடு வேறு. இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கம், நாம் தமிழர் கட்சிக்கு போட்டி என்று கூற முடியாது.
அனைத்துக்கட்சி கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியை பொருட்படுத்துவது இல்லை. காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை போல் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை கைவிட வேண்டும் என்று கூறுவதற்கு கர்நாடக முதல்-மந்திரிக்கு உரிமை இல்லை.
இது அத்துமீறலான செயல். சீமானுக்கு ரூ.1,800 கோடி சொத்து உள்ளது என்று கூறுபவர்கள், அது எங்கிருந்து வந்தது என்றும் கூற வேண்டும். அப்படி இருந்தால், என்னுடைய வீட்டிலும் சோதனை செய்து பணத்தை எடுத்து செல்லட்டும்.
நிதி நெருக்கடி காரணமாக 65 சதவீத இடங்களில் உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறது. வரும் 22ஆம் திகதி எங்களது வெற்றி வாய்ப்பு குறித்து தெரியவரும். கொரோனா சூழல் காரணமாக வாக்கு சேகரிக்க இயலவில்லை.
ஊடகத்தின் வாயிலாக நாங்கள் உங்களிடம் கேட்டுக்கொள்கிறோம், எங்களின் எளிய பிள்ளைகளை தான் தேர்தலில் நிறுத்தி உள்ளோம், சிறந்த நிர்வாகத்தை எங்களின் பிள்ளைகள் வழங்குவார்கள். அனைவருக்கும் விவசாய சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.