சாலை விபத்துகளில் தமிழ்நாடு முதலிடம் - ஒரு மணி நேரத்திற்கு இத்தனை பேர் உயிரிழப்பா?
இந்தியாவில் 2025 ஆம் ஆண்டில் அதிக சாலை விபத்து நிகழும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
இந்தியாவில் சாலை விபத்துகள்
இந்தியாவில் சாலை விபத்துகள் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நாடாளுமன்றத்தில் எழுத்துபூர்வமாக பதிலளித்துள்ளார்.

இதன்படி, 2025 ஆம் ஆண்டில் இந்தியாவில் 5.13 லட்சத்திற்கும் அதிகமான சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன. இது முந்தைய ஆண்டை விட 5.3 சதவீதம் அதிகமாகும். இந்த விபத்துகளில் 1,83,382 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதாவது சராசரியாக ஒரு மணிநேரத்திற்கு 57 விபத்துகளும், 21 உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.
முதலிடத்தில் தமிழ்நாடு
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 71,387 சாலை விபத்துகளும், உத்தரப் பிரதேசத்தில் 27,550 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. 2025 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் 21,122 விபத்துக்கள் நிகழ்ந்து 6,156 பேர் உயிரிழந்தனர்.

தமிழ்நாட்டில், 2024 ஆம் ஆண்டில் சாலை விபத்துகளில் 18,449 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 2025 ஆம் ஆண்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18,505 ஆக அதிகரித்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில், அதிகபட்சமாக 24,116 லிருந்து, 27,550 ஆக உயர்ந்துள்ளது. 18 மாநிலங்களில் 2024 ஆம் ஆண்டை விட, 2025 ஆம் ஆண்டில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 17 மாநிலங்களில் குறைந்துள்ளது.
லட்சத்தீவில் கடந்த 2 ஆண்டுகளில் சாலை விபத்துகளில் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படவில்லை.
கடந்த 3 ஆண்டுகளில், உயிரிழப்புகள் அல்லது கடுமையான காயங்களை ஏற்படுத்திய 5 விபத்துக்கள் அல்லது மரணங்களை ஏற்படுத்திய 10 விபத்துக்கள் நிகழ்ந்த ஒரு நெடுஞ்சாலையின் 500 மீட்டர் நீளப் பகுதி 'Black Corrider' என வரையறுக்கப்படுகிறது.
இதுபோன்ற அதிக Black Corrider கொண்ட முதல் 5 நகரங்களில் மூன்று தமிழ்நாட்டில் உள்ளன. அதிகபட்சமாக விழுப்புரம் 70 வழித்தடங்களுடன் முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து புனே கிராமப்புறம் (60), திருச்சி (56), பூர்வா மேதினிபூர் (52) மற்றும் கடலூர் (49) ஆகிய நகரங்கள் உள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |