ஒரு ஆண்டில் 55,000 மில்லிலிட்டர் தாய்ப்பால் தானம் அளித்து தமிழக பெண் சாதனை!
ஓர் ஆண்டில் 55,000 மி.லி தாய்ப்பால் தானம் அளித்து சாதனை படைத்த பெண்.
ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் கிடைத்த அங்கீகாரம்.
தமிழகத்தை சேர்ந்த பெண்ணொருவர் ஓர் ஆண்டில் 55,000 மி.லி தாய்ப்பால் தானம் அளித்து சாதனை படைத்துள்ளார்.
குழந்தையின் முதல் உணவாக அனைவராலும் கருதப்படுவது தாய்ப்பால். பல்வேறு காரணங்களால் பல தாய்மார்களுக்கு தாய்ப்பால் போதுமான அளவு சுரப்பதில்லை. மேலும் பிரசவத்தின் போது தாய் இறந்துவிட்டால் அந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் கிடைப்பதில்லை.
அந்த குழந்தைகளுக்காக கடந்த 2014ம் ஆண்டு முதல் தாய்ப்பால் வங்கி அறிமுகப்படுத்தப்பது. நாடு முழுவதும் மொத்தம் 70 தாய்ப்பால் வங்கிகள் இருக்கும் நிலையில் அவற்றில் சரி பாதிக்கு மேல் தமிழ்நாட்டில் தான் இருக்கின்றன.
இந்த வங்கியில் அமிர்தம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் தாய்ப்பால் தானம் செய்து வருகிறார் கோவையை சேர்ந்த பொறியியல் பட்டதாரி சிந்துமோனிகா (29).
கடந்த ஒரு ஆண்டில் 55,000 மில்லி லிட்டர் (55 லிட்டர்) தாய்ப்பாலை தானமாக வழங்கியுள்ளார். இதன் மூலம் 1,500 குழந்தைகள் பயனடைந்துள்ளனர். அவரின் இந்தப் பணியை, ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அங்கீகரித்துள்ளது.
சிந்து மோனிகா கூறுகையில், தாய்ப்பால் தானம் செய்யலாம் என முடிவு செய்தபோது, என் கணவர் ஒத்துழைப்புக் கொடுத்தார். அமிர்தம் தாய்ப்பால் குழு’ மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு தாய்ப்பால் தானம் செய்து வருகிறேன்.
என் குழந்தை பிறந்த 100 நாளில் இருந்து தானம் செய்கிறேன். தற்போது குழந்தைக்கு 19 மாதங்கள் ஆகிவிட்டன தாய்ப்பால் கிடைக்காமல் குழந்தைகள் இறப்புகூட நடக்கிறது. தாய்ப்பால் தானம் மூலம் அவற்றைத் தடுக்க முடியும் என கூறியுள்ளார்.