பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்கு வரும் பயணிகள் மீதான கட்டுப்பாடுகள் விரைவில் நீக்கம்: வெளியாகியுள்ள புதிய தகவல்
பிரான்சிலிருந்து பிரித்தானியா வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் விரைவில் நீக்கப்படும் என ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
எந்தெந்த நாடுகள் பிரித்தானியாவின் அபாய நாடுகள் பட்டியலில் வைக்கப்படுவது என்பது தொடர்பான அரசின் ட்ராபிக் லைட் அமைப்பை பிரித்தானியா மீளாய்வு செய்துவரும் நிலையில், அடுத்த வாரம் முதல் பிரான்சிலிருந்து பிரித்தானியா வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என ஒரு தகவல் தெரிவிக்கிறது.
பீட்டா கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான அச்சுறுத்தல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதை பிரித்தானிய அரசு அதிகாரிகள் ஒபுக்கொண்டுள்ளதாக கருதப்படும் நிலையில், பிரான்ஸ், ஆம்பர் பிளஸ் பட்டியலிலிருந்து நீக்கப்பட உள்ளதாக நம்பப்படுகிறது.
தற்போது உள்ள கட்டுப்பாடுகளின்படி, பிரான்சிலிருந்து பிரித்தானியா திரும்புவோர் தங்களை 10 நாட்கள் வரை தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் என்ற கட்டுப்பாடு அமுலில் உள்ளது.
அதற்குக் காரணம் பிரான்ஸ் பிரித்தானியாவின் ’ஆம்பர் பிளஸ்’ பட்டியலில் உள்ளதுதான். ஆனால், ’ஆம்பர்’ பட்டியலில் உள்ள நாடுகளிலிருந்து வருவோருக்கு இந்த தனிமைப்படுத்தல் கிடையாது.
பிரான்சில் சுமார் 3.7 சதவிகிதம் பேருக்கு மட்டுமே இந்த பீட்டா கொரோனா வைரஸ் தொற்று இருக்கும் நிலையில், பிரான்சின் கடல் கடந்த பிரதேசமான ரீயூனியன் தீவில் பீட்டா வைரஸ் பரவல் அதிகம் காணப்படுகிறது.
ஆகவே, பிரித்தானிய அதிகாரிகள் பிரான்சிலுள்ள தொற்றையும் ரீயூனியன் தீவில் உள்ள தொற்றையும் போட்டு குழப்பிக்கொண்டுள்ளார்களா என சில நிபுணர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
எனவே, ஆம்பர் பிளஸ் பட்டியலிலிருக்கும் பிரான்ஸ் விரைவில் ஆம்பர் பட்டியலுக்கு மாற்றப்படும் என நம்புவதாக பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.