இந்தியாவின் டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தை வெளியேற உத்தரவிட்ட கென்ய ஜனாதிபதி
Tata Chemicals ordered out of Kenya: டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம் கென்யாவிலிருந்து வெளியேற உத்தரவிடப்பட்டது.
இந்தியாவின் முக்கிய இரசாயன நிறுவனங்களில் ஒன்றான டாடா கெமிக்கல்ஸ், கென்யாவை விட்டு வெளியேறும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

நாட்டிற்குப் போதுமான பலன்களை உருவாக்கத் தவறிவிட்டதாக கென்யா அரசாங்கம் கூறியதைத் தொடர்ந்து வெளியேற உத்தரவிடப்பட்டது.
கண்ணாடி மற்றும் இரசாயனப் பொருட்களைத் தயாரிப்பதற்காக சோடா சாம்பலை உள்நாட்டில் பதப்படுத்துவதற்குப் பதிலாக, அந்நிறுவனம் அதை ஏற்றுமதி செய்து வருவதாகக் கூறி, தனது செயல்பாடுகளை முடித்துக்கொண்டு வெளியேறுமாறு ஜனாதிபதி வில்லியம் ரூட்டோ கேட்டுக்கொண்டுள்ளார்.
கென்யர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளையும் முதலீடுகளையும் கொண்டுவரும் நோக்கத்துடன், அந்நிறுவனத்தின் செயல்பாடுகளை ஏற்று நடத்த புதிய முதலீட்டாளர்களை அரசு அடையாளம் கண்டுள்ளதாகவும் ரூட்டோ தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அரசாங்கத்தின் முடிவை மதிப்பதாகவும், நிலுவையில் உள்ள விவகாரங்களுக்குத் தீர்வு காண உரிய சட்ட மற்றும் ஒழுங்குமுறை வழிமுறைகள் வாயிலாக ஆக்கபூர்வமான ஈடுபாட்டைத் தொடர உறுதிபூண்டுள்ளதாகவும் டாடா கெமிக்கல்ஸ் தெரிவித்துள்ளது.
இந்தியப் பெருநிறுவனமான டாடா குழுமத்தின் ஒரு அங்கமான இந்நிறுவனம், கென்யத் தலைநகர் நைரோபியிலிருந்து சுமார் 75 மைல்கள் தென்மேற்கே உள்ள மகாதி ஏரியில் செயல்படுகிறது. இது ஆண்டுதோறும் 3,50,000 டன்னுக்கும் அதிகமான சோடா சாம்பலை (soda ash) இந்தியா, தென்கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவின் பிற பகுதிகள் உள்ளிட்ட சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.

சோடியம் கார்பனேட்டின் பொதுவான பெயரான இயற்கை சோடா சாம்பலை உற்பத்தி செய்வதில் கென்யா உலகின் நான்காவது பெரிய நாடாகும். இது உலகளாவிய உற்பத்தியில் 1% பங்களிக்கிறது.
இது முக்கியமாக இயற்கை உவர்நீர்கள் அல்லது ட்ரோனா எனும் கனிமத்திலிருந்து தயாரிக்கப்பட்டு, கண்ணாடி, இரசாயனங்கள், மின்கலங்கள் மற்றும் பிற தொழில்துறைப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது.
டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம் கென்யாவின் மிகப்பெரிய கனிம ஏற்றுமதியாளர்களில் ஒன்றாகவும், ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய சோடா சாம்பல் உற்பத்தியாளராகவும் திகழ்கிறது.
இந்நிறுவனம் மகாதி ஏரியிலிருந்து ட்ரோனாவைப் பிரித்தெடுத்து, அதை சோடா சாம்பலாகப் பதப்படுத்துகிறது. இந்த சோடா சாம்பல், கண்ணாடி தயாரிப்பில் ஒரு முக்கிய மூலப்பொருளாக இருப்பதுடன், சவர்க்காரங்கள், இரசாயனங்கள், நீர் சுத்திகரிப்பு, ஜவுளி மற்றும் காகிதம் ஆகியவற்றிலும் பயன்படுத்தப்படுகிறது.
2024-ஆம் ஆண்டு டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம், சுமார் 245,000 டன்கள் சோடா-ஆஷ் விற்பனையையும், 78.7 மில்லியன் டொலர் விற்றுமுதலையும் பதிவு செய்துள்ளது. இந்நிறுவனம் சுமார் 500 பேரை வேலைக்கு அமர்த்தியுள்ளது; மேலும், நீர், சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்பு மற்றும் பிற உதவிகள் மூலம் மகாதி (Magadi) பகுதியைச் சுற்றியுள்ள சுமார் 30,000 பேர் அதன் சமூக நலத் திட்டங்களால் பயனடைவதாகக் கூறுகிறது.

ஆனால், அந்த நிறுவனம் கென்யாவிற்குப் போதுமான அளவு பங்களிப்பை வழங்கவில்லை என்றும், நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாகவும் ஜனாதிபதி ருட்டோ குற்றம் சாட்டியுள்ளார்.
மட்டுமின்றி, ராயல்டி கட்டணங்களைச் செலுத்தத் தவறியது மற்றும் பிற ஒழுங்குமுறைத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறியதைக் காரணம் காட்டி, டாடா கெமிக்கல்ஸ் மகாதி நிறுவனத்தின் செயல்பாடுகளை இடைநிறுத்துமாறு கென்யாவின் சுரங்கத்துறை அமைச்சர் உத்தரவிட்ட ஐந்து வாரங்களுக்குப் பிறகு ஜனாதிபதி ரூட்டோவின் இந்தக் குற்றச்சாட்டுகள் வெளி வந்துள்ளன.
2005-ஆம் ஆண்டில் இங்கிலாந்தைச் சேர்ந்த புரூனர் மாண்ட் குழுமத்தை டாடா கெமிக்கல்ஸ் கையகப்படுத்தியபோது, இந்தச் செயல்பாட்டையும் அது பொறுப்பேற்றுக்கொண்டது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |