23,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பிரபல நிறுவன அதிகாரிக்கு ரூ 28 கோடி சம்பளம்
தகவல் தொழில்நுட்பத் துறையின் முன்னணி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், அதன் வரலாற்றில் மிகப்பெரிய ஊழியர்கள் பணிநீக்கத்தை செய்த நிலையில் அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரிக்கான சம்பளத்தை அறிவித்துள்ளது.
ரூ 28.1 கோடி
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் 2026 ஆம் நிதியாண்டில் 23,460 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக இருக்கும் கே.கிருதிவாசன், 2026ஆம் நிதியாண்டில் மொத்தம் 28.1 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார்.

இது முந்தைய நிதியாண்டை விட 6 சதவீதம் அதிகமாகும். கிருதிவாசன் பெற்ற 28.1 கோடி ரூபாய் சம்பளத்தில் 1.67 கோடி ரூபாய் அடிப்படை சம்பளமாகவும், 1.43 கோடி ரூபாய் பலன்கள், சலுகைகள் மற்றும் படிகளாகவும், 25 கோடி ரூபாய் கமிஷனாகவும் பெற்றுள்ளார்.
இந்த சம்பளம் டிசிஎஸ் ஊழியர்களின் சராசரி சம்பளத்தை விட 332.8 மடங்கு அதிகமாகும். டிசிஎஸ் நிறுவனம் 2026 நிதியாண்டின் இறுதியில் 584,519 ஊழியர்களுடன் இயங்கிய நிலையில் முந்தைய நிதியாண்டில் இது 607,979 ஊழியர்களுடன் இயங்கி வந்தது.
இதன் மூலம் ஒரு வருடத்தில் 23,460 ஊழியர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இந்த பணிநீக்கம் மென்பொருள் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
7 சதவீதம் வரை
டிசிஎஸ் நிறுவனம் தனது வருடாந்திர அறிக்கையில், தலைமை நிர்வாக அதிகாரியின் சம்பள உயர்வு, நிறுவனத்தின் ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு ஏற்பவே இருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்தியாவில் டிசிஎஸ்-ன் இளநிலை மற்றும் நடுத்தர ஊழியர்கள் ஆண்டுக்கு 4.5 முதல் 7 சதவீதம் வரை சம்பள உயர்வு வழங்கப்பட்டது. கிட்டத்தட்ட இதே அளவிலான சம்பள உயர்வை தான் சிஇஓ கிருதிவாசனும் பெற்றுள்ளார்.

இதேவேளையில் டிசிஎஸ் நிறுவனத்தில் சிறப்பாக செயல்திறன் கொண்ட ஊழியர்களுக்கு இரட்டை இலக்க சதவீதத்தில் சம்பள உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு வெளியே உள்ள ஊழியர்களுக்கு 1 முதல் 6 சதவீதம் வரை உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |