தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்ட 1,621 ஆசிரியர்கள் பலி? உத்தரபிரதேசத்தில் இருந்து அதிர்ச்சி தகவல்
இந்தியாவின் உத்தரபிரதேச பஞ்சாயத்து தேர்தல் பணியில் ஈடுபட்டுத்தப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களில் 1,621 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில ஆரம்ப ஆசிரியர்கள் யூனியன் தெரிவித்துள்ளது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தல் ஏப்ரல் 15, 19, 26, 29 ஆகிய தேதிகளில் மொத்தம் 4 கட்டங்களாக நடைபெற்றது.
தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2-ம் திகதி எண்ணப்பட்டன. பஞ்சாயத்து தேர்தல் பணியில் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதற்கிடையில், தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. தொற்று பாதிப்பு காரணமாக பலரும் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பஞ்சாயத்து தேர்தல் பணியில் ஈடுபட்டுத்தப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களில் 1,621 பேர் கொரோனா தாக்குதல் மற்றும் பிற பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக உத்தரபிரதேச ஆரம்ப பள்ளி ஆசிரியர் யூனியன் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த யூனியன் தலைவ்வர் தினேஷ் சந்திர சர்மா கூறுகையில், பொருந்தொற்று காலத்தில் தேர்தல் பணிகள் மேற்கொண்ட தொடக்க நிலை ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் உயிரிழப்பு 1,621 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.
இதில் பெரும்பாலானோர் மாரடைப்பு மற்றும் மன அழுத்ததால் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.