ஜோதிடரின் கணிப்பை கேட்டு திருமண பரிகாரம்: இறுதி நாளில் உயிரை மாய்த்துக்கொண்ட இளம்பெண்
இந்திய மாநிலம் கர்நாடகாவில் இளம்பெண்ணொருவர், ஜோதிட பரிகாரம் செய்த பின் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பிரியாமல் இருக்க பரிகாரம்
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த 27 வயது இளம்பெண் வித்யஜோதி. இவர் தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றி வந்தார்.

வித்யஜோதி மாற்று சமூக இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். என்றாலும் இருவரது குடும்பத்தினரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், வித்யஜோதியிடம் ஜோதிடர் ஒருவர் மாற்று சமூகத்தினரை திருமணம் செய்வதால் பிரச்சனை உண்டாகும் என்றும், அது விவாகரத்து வரை செல்லும் என்றும் கூறியிருக்கிறார்.
அதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த வித்யஜோதி அதற்கான பரிகாரத்தை கேட்டுள்ளார். ஜோதிடர் கூறியபடி, 9 நாட்கள் பரிகாரமும் செய்துள்ளார்.
இறுதி நாள் பரிகாரம்
ஆனால், இறுதி நாள் பரிகாரம் முடிந்தவுடன் இரவு கோவிலுக்கு செல்ல வேண்டும் என்ற நிலையில், வித்யஜோதி தனது அறைக்கு சென்றுள்ளார்.
அவரது பெற்றோர் இரவு வேளையில் பலமுறை அழைத்து வித்யஜோதியை அழைத்தும் அவர் கதவை திறக்கவில்லை.
இதனால் சந்தேகமடைந்து சன்னல் வழியாக பார்த்தபோது, வித்யஜோதி தூக்கில் தொங்கியபடி இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனையடுத்து தகவல் அறிந்த பொலிஸார் வித்யஜோதியின் உடலைக் கைப்பற்றி, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |