இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட 7 பேருக்கு புதிய சிக்கல்: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் பரபரப்பு
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்ட இளைஞர்களில் 7 பேர்களுக்கு இதய வீக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தடுப்பூசிகளால் ஏற்படும் பக்கவிளைவுகளா என்பது தொடர்பில் சுகாதார நிபுணர்கள் ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது.
தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இளைஞர்கள் 7 பேரும் வெவ்வேறு மாகாணங்களை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
ஏப்ரல் அல்லது மே மாதத்தில் பைசர் நிறுவனத்தின் இரண்டாவது தடுப்பூசி பெற்றுக்கொண்ட 14 முதல் 19 வயதுடைய 7 பேர்களுக்கே மார்பில் வலி ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து மருத்துவமனையை நாடிய நிலையில், முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் இளைஞர்களுக்கு இதயத்தில் விக்கம் ஏற்பட்டுள்ளது அடையாளம் காணப்பட்டுள்ளது.
இளைஞர்களின் நிலை ஆபத்தான கட்டத்தில் இல்லை எனவும், 2 முதல் 6 நாட்களுக்குள் அவர்கள் குடியிருப்புக்கு அனுப்பப்பட்டதாகவும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் நாட்டில் 24 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களில் பைசர் தடுப்பூசி பெற்றுக்கொண்ட 3000 பேர்களில் ஒருவருக்கு இதுபோன்ற இதய வீக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தனர்.
மேலும் ஏப்ரல் மாதம் மட்டும் 60 இளைஞர்கள் குறித்த பாதிப்புடன் மருத்துவர்களை நாடியதாகவும் இஸ்ரேல் சுகாதாரத்துறை குறிப்பிட்டிருந்தது.