தர்பூசணி சாப்பிட்ட மூன்று சிறுவர்கள் உடல் நலம் பாதிப்பு: 15 வயது பையன் பலி
இந்தியாவின் சட்டீஸ்கர் மாநிலத்தில் தர்பூசணிப் பழம் சாப்பிட்ட 15 வயதுப் பையன் ஒருவன் உயிரிழந்துள்ள விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
தர்பூசணி சாப்பிட்ட சிறுவர்கள்
சமீபத்தில் மும்பையில் தர்பூசணி சாப்பிட்ட ஒரு குடும்பம் உயிரிழந்ததாக வெளியான செய்திகள் பரபரப்பை உருவாக்கியது நினைவிருக்கலாம்.
இந்நிலையில், இந்தியாவின் சட்டீஸ்கர் மாநிலத்திலுள்ள Ghurkot என்னும் கிராமத்துக்கு வெவ்வேறு கிராமங்களிலிருந்து உறவினர் பிள்ளைகள் வந்துள்ளார்கள்.

தங்கள் மாமா வீட்டுக்கு வந்த அவர்கள், ஞாயிற்றுக்கிழமை மாலை, ஏற்கனவே வெட்டி வைக்கப்பட்டிருந்த தர்பூசணி ஒன்றை சாப்பிட்டுள்ளார்கள்.
சிறிது நேரத்தில் அகிலேஷ் திவார் (Akhilesh Dhivar, 15), ஸ்ரீ திவார் (Shri Dhivar, 4), பிண்டு திவார் (Pintu Dhivar, 12) மற்றும் ஹிதேஷ் திவார் (Hitesh Dhivar, 13) ஆகிய நால்வருக்கும் கடுமையான வாந்தியும் வயிற்றுப்போக்கும், மூச்சுத்திணறலும் ஏற்பட்டுள்ளது.
பிள்ளைகளின் நிலைமை மோசமாகவே, அந்தக் குடும்பத்தினர் அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
பிள்ளைகளை பரிசோதித்த மருத்துவர்கள், அகிலேஷ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்ததால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மற்ற மூன்று பிள்ளைகளும் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காலையிலேயே வெட்டி வைக்கப்பட்ட தர்பூசணி திறந்தே வைக்கப்பட்டிருந்ததால் அதில் கிருமிகள் பரவியிருக்கலாம் என்றும், அதை மாலையில் சாப்பிட்டதால் பிள்ளைகளுக்கு கிருமித் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
உயிரிழந்த அகிலேஷின் உடல் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அந்த தர்பூசணி மற்றும் வீட்டிலிருந்த மற்றொரு தர்பூசணி ஆகியவை ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அதிர்ச்சியை உருவாக்கியுள்ள இந்த சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |