எரித்துக் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட நபர்..வேறொரு ஊரில் கைது..அம்பலமான அதிர்ச்சி உண்மை
இந்திய மாநிலம் தெலங்கானாவில் காப்பீட்டு பணத்திற்காக அரசாங்க ஊழியர் ஒருவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அரசாங்க ஊழியர்
தெலுங்கானா மாநிலம் வெங்கடாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மா நாயக். ஐதராபாத்தில் அரசு ஊழியராக பணியாற்றி வரும் இவர் சென்ற கார் கடந்த 9ஆம் திகதி எரிந்த நிலையில் கிடந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காரில் இருந்து மீட்கப்பட்ட நபர் ஒருவரின் உடல் தன் கணவர் தான் என்று தர்மாவின் மனைவி நீலா கூறினார்.
அதனைத் தொடர்ந்து அவரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. அவர் அவசர அவசரமாக உடலை வாங்கிக் கொண்டு சென்றதும், பொலிஸார் முன்பு மட்டும் கண்ணீர் விட்டு அழுதது சந்தேகத்தை ஏற்படுத்தியது.
கோடிக்கணக்கான காப்பீட்டு தொகை
இதனால் பொலிஸார் விசாரணையை துரிதப்படுத்தினர். அப்போது நீலா கணவரின் இறப்பு சான்றிதழை பெற்று உடனடியாக கோடிக்கணக்கான காப்பீட்டு தொகையை பெற முயற்சித்ததை கண்டுபிடித்தனர். பின்னர் அவரைப் பிடித்து செல்போனை ஆராய்ந்தபோது பொலிஸாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
பூனாவில் தர்மா உயிருடன் இருப்பதும், அவருடன் நீலா பேசி வந்ததும் தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து பூனாவுக்கு சென்ற பொலிஸார் தர்மாவை கைது செய்து தெலங்கானாவுக்கு அழைத்து வந்தனர்.
விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்
அதன் பின்னர் நடந்த விசாரணையில் பல உண்மைகள் தெரிய வந்தது. தர்மா சூதாட்டத்தில் சுமார் 2 கோடி வரை பணத்தை இழந்துள்ளார். அதனை மீட்க அவர் வழி தேடியபோது தான் காப்பீடு மூலம் 7 கோடி வரை பணம் கிடைக்கும் என்பதை அறிந்துள்ளார்.
ஆனால் தனது இறப்பிற்கு பின்னர் தான் அந்த பணம் கிடைக்கும் என்பதால், தன்னை போன்ற உருவமொத்த நபரை கொலை செய்து தான் இறந்துவிட்டதாக உலகை நம்ப வைக்க திட்டம் தீட்டியுள்ளார்.
இதற்காக பழைய கார் ஒன்றை வாங்கிய தர்மா, அதனை அனைவர்க்கும் தெரிய வைக்கும் விதமாக இனிப்புகளை சக ஊழியர்களுக்கு வழங்கியுள்ளார். பின்னர் அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்துவிட்டு ஊருக்கு சென்றுள்ளார். அங்கு சென்றபின் தனது மனைவி நீலா, மகன், அக்கா சுனந்தா, அவருடைய மருமகன் ஸ்ரீனிவாஸ் ஆகியோரிடம் திட்டத்தை செயல்படுத்துமாறு கூறியுள்ளார்.
கார் ஓட்டுனர் கொலை
கார் ஓட்டுனர் பாபு என்பவரை ஸ்ரீனிவாஸ் அழைத்து வந்துள்ளார். அவருக்கு மொட்டை போட்டு, தர்மாவின் உடைகளை அணிவித்து வெங்கடாபுரத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கே சென்றவுடன் பாபுவை கத்தியால் தாக்கி கொலை செய்துவிட்டு, முன்னிருக்கையில் உட்கார வைத்து பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளனர். இந்த சம்பவங்களை தர்மா கூற பொலிஸார் அதனை வாக்குமூலமாக பெற்றுக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து தர்மா, மனைவி நீலா, மகன் உள்ளிட்ட 5 பேரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு பின் சிறையில் அடைக்கப்பட்டனர்.