தீர்க்க தரிசனம் என்ற பெயரில் பல பெண்களை சீரழித்த சாமியார்! விசாரணையில் அடுத்தடுத்து வெளி வரும் உண்மைகள்
இந்தியாவில் பல பெண்களை சீரழித்த போலி சாமியாரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
தெலங்கானா மாநிலம், நல்லகொண்டா மாவட்டம், பி.ஏ.பள்ளி அடுத்த அஜ்மாபூர் கிராமத்தில் சாய் சர்வஸ்வாமு சாய் மான்சி தொண்டு அறக்கட்டளை என்ற பெயரில் ஆசிரமம் ஒன்று இயங்கி வந்தது.
இங்கு வரும் பக்தர்களிடம் யாகம், பூஜைகள் செய்வதாக கூறி, அங்கு சாமியாராக இருந்த போலி சாமியார் விஸ்வ சைதன்யா பணம் பறித்துள்ளார். அதுமட்டுமின்றி ஆசிரமத்திற்கு வரும் பல பெண்களை வசியப்படுத்தி, அவர்களிடம் நெருக்கமாக இருந்துள்ளார்.
அதைத் தொடர்ந்து, சாய்பாபாவின் தீர்க்க தரிசனம் என்ற பெயரால் வசதியான பக்தர்களை ஈர்த்து பணம் வாங்கியுள்ளார் போலி மூலிகைகள், லேகியம், எண்ணெய் ஆகியவற்றை உடல் நலக்குறைவு உள்ளவர்களுக்கு தீர்வு கிடைக்கும் என்று விற்று வந்துள்ளார்.
இவரின் பித்தலாட்டம் எல்லாம் இப்போது தெரியவந்ததால், பொலிசார் தற்போது அவரை அதிரடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், ஆந்திரா மாநிலம், கிருஷ்ணா மாவட்டம் நந்திகாமாவை சேர்ந்த விஸ்வ சைதன்யா, ஐதராபாத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு கம்ப்யூட்டர் மையத்தை அமைத்து வந்துள்ளார்.
அங்கு பொதுமக்களிடம் சீட்டு பிடிப்பதாக கூறி, சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின், ஜாமீனில் வெளியே வந்த இவர், சாய்பாபா பக்தராகி தனியார் தொலைக்காட்சியில் சொற்பொழிவு ஆற்றினார்.
அதன் பின், தீர்க்க தரிசனம் என்ற பெயரில் வீடியோக்கள் எடுத்து தானாக ஒரு யூடியூப் சேனலை தொடங்கினார். என்னுடன் உடலுறவு கொண்டால் பாசிடிவ் எனர்ஜி கிடைக்கும் என கூறி பல பெண்களுடன் ஆசிரமத்தில் பாலியல் உறவு வைத்துக் கொண்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
தற்போது கொடுக்கப்பட்டுள்ள புகாரின் அடிப்படையில், சைதன்யா, அனந்தபுரத்தை சேர்ந்த வீடியோ எடிட்டர் கவுதம், டேட்டா என்ட்ரி ஆபரேட்டராக இருந்த கம்மத்தை சேர்ந்த ஸ்ருஜன் குமார், ஆக்குதோடப்பள்ளியை சேர்ந்த டிரைவர் விஜய் ஆகியோரை பொலிசார் கைது செய்தனர்.
மேலும், இவர்களிடம் இருந்து 26 லட்சம் ரொக்க பணம், 500 கிராம் தங்க நகைகள், போலி சாமியாரின் 2வது மனைவி சுஜாதா மீது உள்ள 1.50 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரங்கள், 17 ஏக்கர் நிலம், யூடியூப் சேனலுக்கு பயன்படுத்திய 7 லேப்டாப்கள், 4 செல்போன்கள், 1 கார் பல்வேறு வகையான மூலிகைகள், பூஜை பொருட்கள், 50 லட்சம் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.