ஜேர்மன் காப்பகம் ஒன்றில் நோயாளிகளை பாதுகாக்கவேண்டிய செவிலியர் உதவியாளர் செய்த பயங்கர செயல்
ஜேர்மன் காப்பகம் ஒன்றில் நான்கு பேரை கொடூரமாக கொலை செய்த செவிலியர் உதவியாளர் ஒருவருக்கு, நேற்று 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
ஜேர்மனியின் பெர்லினுக்கு அருகிலுள்ள, Potsdam என்ற இடத்தில் அமைந்துள்ள அந்த காப்பகத்தில், உடல் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 65 பேர் தங்கியிருந்தார்கள். கண் தெரியாதவர்கள், காது கேட்காதவர்கள் மற்றும் கடுமையாக ஆட்டிஸக் குறைபாடு கொண்டவர்களும் அவர்களில் அடங்குவர்.
அங்கு பணி புரிந்த 80 பேருக்கும் அதிகமானவர்களில் ஒருவர் Ines Andrea R (52).
ஏப்ரல் மாதம், Andrea, அந்த காப்பகத்தில் தங்கியிருந்த நான்கு பேரை கொடூரமாக கத்தியால் குத்திக் கொன்றார். மேலும் இரண்டு பேரின் கழுத்தைக் கயிற்றால் இறுக்கிக் கொல்ல முயன்றிருக்கிறார், அவர்களில் ஒருவர் இறந்துவிட்டதாக Andrea நினைத்திருக்கிறார். ஆனால் அவர் சாகவில்லை, மற்றவரைக் கொல்ல தன்னால் இயலாததால் அவரை விட்டு விட்டு, இன்னொரு 43 வயது பெண்ணைக் கத்தியால் குத்தியிருக்கிறார்.
இதில், இரண்டு பெண்களும், இரண்டு ஆண்களும், 31 முதல் 56 வயதுடையவர்கள், உயிரிழக்க, கத்தியால் குத்தப்பட்ட அந்த 43 வயது பெண் அவசர அறுவை சிகிச்சைக்குப் பின் பிழைத்துக்கொண்டார். அவரால் கழுத்து நெறிக்கப்பட்டவர்களும் பிழைத்துக்கொண்டார்கள். உடனடியாக கைது செய்யப்பட்ட Andrea மீது, நான்கு கொலை வழக்குகளும், மூன்று கொலை முயற்சி குற்றச்சாடுகளும் பதிவு செய்யப்பட்டன.
இந்த சம்பவம் ஜேர்மனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நேற்று Andreaவுக்கு நீதிமன்றம் ஒன்று 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், இனி காப்பகங்களில் வேலை செய்வதற்கும் அவருக்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டபோது, தான் சிறு வயதில் தனிமையாக வீட்டில் அடைபட்டிருந்ததாகவும், தனக்கும் தன் தாய்க்கும் நல்ல உறவு இல்லை என்றும், தான் எப்போதுமே கவலையுடனும் பயத்துடனும் இருந்ததாகவும் தெரிவித்திருந்தார் Andrea.
அத்துடன், தான் கொலை செய்ததை தன்னாலேயே நம்பமுடியவில்லை என்றும், தான் செய்த செயல்களுக்காக வருந்துவதாகவும் Andrea தெரிவித்திருந்தார்.