அமெரிக்க துப்பாக்கிச்சூடு! மனைவியை அணைத்தபடி கதறும் பொலிஸ் காவலர்.. மனம்பதறவைக்கும் புகைப்படத்தின் பின்னணி
அமெரிக்கப் பள்ளி ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் பத்தொன்பது பிஞ்சுகள் கொல்லப்பட்ட சம்பவத்தில், பொலிஸ் காவலர் ஒருவர் தன் மனைவியை அணைத்தபடி கதறியழும் புகைப்படம் ஒன்று கவனம் ஈர்த்துள்ளது.
அந்த புகைப்படத்தின் பின்னணியில், மனதைப் பதறவைக்கும் ஒரு சம்பவம் உள்ளது. நேற்று முன் தினம், செவ்வாய்க்கிழமை (24.5.2022), காலை 11.30 மணியளவில், டெக்சாசிலுள்ள Robb Elementary School என்னும் பள்ளிக்குள் நுழைந்த முன்னாள் மாணவனான Salvador Ramos (18) என்பவன், ஈவிரக்கமின்றி பிஞ்சுக்குழந்தைகள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினான்.
அந்த பயங்கர சம்பவத்தில் பத்தொன்பது மாணவ மாணவிகளும் இரண்டு ஆசிரியைகளும் கொல்லப்பட்டார்கள். தகவலறிந்து பள்ளிக்கு விரைந்த பொலிசாரில் ஒருவர் Felix Rubio. Felix, துணை ஷெரீஃப் ஆக பணியாற்றி வருகிறார். ஆனால், கடமையாற்றுவதற்காக அவர் பள்ளிக்கு சென்றபோதுதான் அவருக்கு அந்த துயரச் செய்தி சொல்லப்பட்டது.
ஆம், கொல்லப்பட்ட குழந்தைகளில், Felixஉடைய மகளான Lexi (10)ம் ஒருவர். இதில் இன்னும் சோகம் என்னவென்றால், சற்று முன்புதான் Felixம் அவருடைய மனைவியும் Lexiயை சந்தித்துவிட்டு வந்திருக்கிறார்கள். அதாவது, சற்று முன் பள்ளியில் ஒரு பரிசு வழங்கும் விழா ஒன்று நடந்துள்ளது. அதில் சிறப்பாக படித்ததற்காக கௌரவ சான்றிதழ் ஒன்றை பெற்றிருக்கிறாள் Lexi.
மேலும் நல்ல குடிமகளுக்கான பரிசும் அவளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த விழாவில் பங்குகொண்டுவிட்டு Felixம் அவருடைய மனைவியான Kimberlyம் தங்கள் மகளுக்கு விடை கொடுத்துவிட்டு வந்திருக்கிறார்கள்.
ஆனால், அதுதான் அவர்கள் தங்கள் அன்பு மகளுக்குக் கொடுக்கும் கடைசி பிரியாவிடை என்பது அப்போது அவர்களுக்குத் தெரியாது. சற்று நேரத்தில், பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் Lexi கொல்லப்பட்டுவிட்டாள். பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடந்ததை அறிந்து பணிக்காக வந்த இடத்தில் தன் மகள் கொல்லப்பட்டுவிட்ட செய்தியை அறிந்து Felix கதறும் புகைப்படம்தான் தற்போது கவனம் ஈர்த்து வருகிறது.
பெற்ற வயிறு துடிதுடிக்கக் கதறும் மனைவிக்கு ஆறுதல் கூற அவரை அணைத்தபடி, Felixம் கண்ணீர் விடும் அந்தக் காட்சி மனதைப் பதறவைக்கிறது.
போதும் இந்த துப்பாக்கிக் கலாச்சாரம் என கதறுகிறார் Felix. அவர் மட்டுமல்ல, பிள்ளைகளை இழந்த அத்தனை பெற்றோரின் கதறல்களும் ஆட்சியாளர்களின் காதுகளில் விழட்டும்!