திடீரென குலுங்கத் தொடங்கிய 980 அடி உயர கட்டிடம்: காரணம் புரியாமல் ஓட்டம் பிடித்த மக்கள்
சீனாவில், திடீரென 980 அடி உயர கட்டிடம் ஒன்று குலுங்கத் தொடங்கியதையடுத்து, கட்டிடத்திலிருந்து வெளியேறி ஓட்டம் பிடித்தார்கள் மக்கள்.
சீனாவின் Shenzhen நகரிலுள்ள SEG Plaza, நாட்டிலுள்ள உயரமான கட்டிடங்களில் ஒன்று ஆகும்.
மிகப்பெரிய மின்னணு பொருட்கள் சந்தையாக விளங்கும் அந்த கட்டிடத்தில் பல அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், நேற்று மதியம் 1 மணியளவில் திடீரென அந்தக் கட்டிடம் குலுங்கத் தொடங்கியுள்ளது.
பெரிய அளவில் காற்றும் இல்லாமல், நில நடுக்கமும் ஏற்படாத நிலையில் திடீரென அந்த கட்டிடம் நடுங்கவே, அதிலிருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு கட்டிடத்தைவிட்டு வெளியேறினர். சாலையோரம் நடைபாதைகளில் நடந்து சென்று கொண்டிருந்தவர்களும் கட்டிடம் குலுங்குவதைக் கண்டு ஓட்டம் பிடித்தனர்.
அப்பகுதியில் நில நடுக்கம் எதுவும் நிகழவில்லை என்பதை வானிலை ஆராய்ச்சி மையம் உறுதி செய்துள்ள நிலையில், எதனால் அந்த கட்டிடம் குலுங்கியது என்பது மர்மமாக உள்ளது. கட்டிடம் குலுங்கியதன் பின்னணியைக் கண்டறியும் முயற்சியில் அதிகாரிகள் இறங்கியுள்ளார்கள்.