ஜேர்மனிக்கு பயணித்த கேரள இளம்பெண்ணை பாதி வழியில் திருப்பி அனுப்பிய விமான நிறுவனம்: காரணம் என்ன தெரியுமா?
ஆய்வுக்காக ஜேர்மனிக்கு பயணித்த கேரளாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை, கத்தார் ஏர்வேஸ் விமான நிறுவனம் பாதி வழியில் திருப்பி அனுப்பிய சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.
கேரளாவிலுள்ள பாலக்காடு என்ற இடத்தைச் சேர்ந்தவர் மாளவிகா மேனன் (Malavika Menon, 25).
ஆய்வு மற்றும் பணிக்காக ஜேர்மனி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மாளவிகா, கத்தார் தலைநகர் Dohaவை அடைந்த நிலையில், அவர் கோவாக்சின் தடுப்பூசி பெற்றிருப்பதாகவும், அது ஜேர்மனியில் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்றும் கூறி அவரை அதிகாரிகள் திருப்பி அனுப்பிவிட்டார்கள்.
சில சந்தர்ப்பங்களில், அரசு அனுமதி பெற்ற சிலருக்கு, ஜேர்மனியில் கோவாக்சின் ஏற்றுக்கொள்ளப்படும் தடுப்பூசிதான் என்பதைக் காட்டும் சான்றிதழ்களை மாளவிகா சமர்ப்பித்துள்ளார்.
அத்துடன், ஜேர்மன் தூதரகம் தனக்கு ஜேர்மனிக்குள் நுழைவதற்கு வழங்கியுள்ள அனுமதியைக் காட்டியும், புலம்பெயர்தல் சான்றிதழ், தான் இணைந்துள்ள பல்கலைக்கழகம் அளித்துள்ள அழைப்புக் கடிதம் முதலானவற்றைக் காட்டியும் கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லையாம்.
அடுத்த விமானத்திலேயே கேரளாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார் மாளவிகா.
அவர் விரைந்து தனது ஆய்வைத் துவங்காவிட்டால் அவர் அந்த ஜேர்மன் ஆய்வு மற்றும் பணி வாய்ப்பை இழக்கும் அபாயத்திலிருக்கிறார்.
இந்த துரதிர்ஷ்ட சம்பவத்துக்குப்பின், பெர்லினிலுள்ள பல்கலைக்கழகம், மாளவிகா, பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்படுவதாக மின்னஞ்சல் ஒன்றை ஜேர்மன் தூதரகத்துக்கு அனுப்பியுள்ளதாம். இந்த தகவலை தூதரகம் விமான நிறுவனத்திடம் தெரியப்படுத்தியபின், தான் மீண்டும் ஜேர்மனி செல்ல இயலும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் மாளவிகா.